Saturday, October 14, 2006

குண்டலினி

Photobucket - Video and Image Hosting

முன்குறிப்பு :

1. எனக்கு குண்டலினி பற்றி பட்டறிவு இல்லை படிப்பறிவு( புத்தகம் மற்றும் இணயம்) சிறிதே உண்டு

2. எனக்கு தெரிந்த மிக சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளவே இந்த பதிவு. விவாதங்கள் மற்றும் மேல் விவரங்கள் வரவேற்க படுகின்றன



இட்ஸ்தாக் பெண்டாவ் என்பவர் ஒரு சோதனையை செய்தார். நம் இதய தசைகளை 7.5 Hz அலைவரிசையில் அதிர செய்தார். இது மூளையில் இந்த அலைவரிசையில் சில அதிர்வுகளை ஏறபடுத்தியது. இந்த அதிர்வுகள் மின்சக்தி போன்ற கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. அது மூளையில் செல்களை ஒரு முகபடுத்தியது. அவ்வாறு ஒரு முகபடுத்தும் போது உடம்பில் உள்ள சக்திகளை மேல் எழுப்பி உடலிலும் மனதிலும் இருந்த இறுக்கங்களைத் தளர்த்தியது. இந்நிலையில் உடல் ஒரு 7.5 Hz அலைவரிசை ஆண்டெனா வாக மாறியது. இந்த அலைவரிசைதான் resonant frequencies of the ionosphere. அதாவது காற்றில் மிதந்து வரும் செய்திகளை கிரகிக்ககூடிய ரேடியோவாக உடல் மாறுகிறது. இது குண்டலினி சக்தி மேல் எழும்பும்போது எற்படும் உணர்வுகளை ஒத்தது என்றார்


ஆனால் இந்த மாதிரியான உணர்வுகளை ஆன்மிகம் (அது எந்த மதமானகும் சரி. மதமே இல்லையென்றாலும் சரி) என்ற பார்வையில் வெளி சக்திகளின் துணை இல்லாமல் அறிவதுதான் குண்டலினி யோகம் என்பது என் சிற்றறிவிற்கு எட்டியது.

இது தான் பாரதம் அளித்த யோகங்களின் மைய தத்துவம்

பாரதத்தின் தென்கோடியில் உள்ள தமிழ் மாநில சித்தர்கள் முதல் வடக்கே உள்ள காஷ்மீர் மாநிலத்தின் சைவர்கள் வரை குண்டலினி யோகத்தை போற்றி வளர்த்திருக்கிறார்கள்.


தன்னை தானே அறிவது தான் யோகத்தின் நோக்கம். இதற்கு முதலில் வேண்டியது உடல். அதைதான் திருமூலர் "உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே" என்றார். திருமூலர், போகர் போன்றவர்கள் குண்டலினி ஞானம் பெற்றவர்களே.

பாரதத்தின் பழம் பெரும் பொக்கிஷம் யோகம் என்பதாகும். எல்லா யோகங்களும் போதிப்பது என்ன வென்றால் உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக் கொள் என்பதே. எல்லா யோக பயிற்சிகளும் முதுகெலும்பு வலிமையாக்குவதை பற்றியும் சுவாசப் பயிற்சியைப் பற்றியும் இருக்கும். இதற்கு முக்கியமான காரணம் குண்டலினியை எழுப்பதான்.

இந்த குண்டலினி-தூங்கி கொண்ட்டிருக்கும் சர்ப்பம் என சமஸ்கிருதத்தில் அறியப் படுகிறது. இந்த தூங்கும் சர்ப்பத்தை எழுப்பி நம் தலைக்கு மேல் விடுவித்து அளவற்ற ஞானத்தை பெறுவது குண்டலினி யோகம்

குண்டலினி பயிற்சிக்கு ஒரு குரு தேவை. இந்த பயிற்சியின் பக்கவிளைவுகள் அதிகம். அதைக் கண்காணிக்க நல்ல குரு தேவை. இதை ஊதாசீனப் படுத்த்கூடாது.

குண்டலினியை எழுப்பதவற்கு ஒரு குரு தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு அதைப் பெற்றவர் தொடர்கிறார். இங்கே சாதி, சமயம் , கடவுள் வேதம், மந்திரம் போன்றவற்றுக்கு வேலையில்லை. நம் உடலின் அடியில் மூலாதாரம் என்ற இடத்தில் தூங்கி கிடக்கும் சக்தி நாபி, வயிறு மார்பு, தொண்டை, நெற்றி கடைசியாக மேல் தலையில் முடிகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு சக்கரம் சுற்றுவது போல் உணர்வுகள் தோன்றும் எனப்படுகிறது. அந்த்ந்த இடங்களுக்கு பெயர் வைத்து அழைக்கப்ப்டுகிறது.

சக்கரம் இருக்கிறது என்றால் ஆபரேசன் செய்து சுத்த விடுவதுதானே என கேள்விகள் கேட்டால் அது முட்டாள்தனம். நேரில் பார்ப்பவைகளைதான் ஆபரேசன் செய்து சரி செய்ய முடியும். நரம்பில் தோன்றும் அதிர்வுகள், மூளையில் ஏற்படும் எண்ணங்களை ஆபரேசனால் ஒன்றும் செய்யமுடியாது.

ஆச்சரியமான உண்மை என்னவென்றால் இந்த சக்கரங்களை குறிக்கும் இடமும் நம் உடம்பில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின்(Endocrine Glands) இருப்பிடமும் சில நரம்புகளின் கொத்துகள் (Ganglion Bundles) இருக்கும் இடமும் ஒன்றாக இருப்பது.

இந்த சக்கரங்களில் இயக்கங்களால் உடலும் மனமும் அமைதியாகின்றன. அமைதியான மனம் பேருண்மைகளை உணர்கிறது. இதுவே இறைவுணர்வு என அறியபடுகிறது.

யோக சாஸ்திரத்தின் எட்டு படிகள்

1. நல்லவைகளை செய்
2. மனம், உடல் செயல் களை சுத்தமாக வைத்திரு
3. ஆசனங்களை அனுஷ்டித்து உடல் நலம் கொள்
4. மூச்சு பயிற்சி செய்து மனதை அமைதி படுத்து
5. உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெறு
6. கவனி
7.குவி
8 தியானி


முதல் இரண்டும் வீட்டிலும், பள்ளியுலும் கற்றுக் கொள்கிறோம். ஆசனங்களை ஹத யோக குருவிடம் கற்றுக் கொள்கிறோம்

ப்ராணாயாமம் என்பது சுவாச பயிற்சி.
உங்கள் மனம் அமைதியாக இருக்கும் போது சுவாசமும் அமைதியாகவும் சீராகவும் இருக்கும்.

அதேபோல் மூச்சு சீராகும் போது மனம் அமைதியாகிறது. வாழும் கலையின் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போதிப்பது இதைத்தான். மனம் அமைதியானால் போதும் சந்தோஷம் தானக வரும் என்பது அவரின் தத்துவம் . இதுவும் குண்டலினி யோகத்தின் ஒருபடிதான்

உடலும் சுவாசமும் கட்டுப்படும் போது கவனமும், நல்லவைகளை நோக்கி குவியும் மனமும் தானாக வந்துவிடும்

தியானம் எனபடும் அடுத்த நிலை. இது சற்று சிரமமானது. ஆனாலும் தொடரும் பயிற்சியினால் கற்றுத்தேறலாம்.

சமாதி என்பது இறுதி நிலை.



எல்லா நிலைகளிலும் நல்லதை நினை நல்லதை செய் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படுகிறது.

இந்த யோகம் எங்கே கற்று தரபடுகிறது எனக் கேட்டால் எங்கும் என்றே பதில் சொல்வேன். மதுரையில் 96 வயது முதியவர் இருந்தார் மிக ஏழ்மையில் வாழ்ந்தாலும் சந்தோசமாக இலவமாக இந்த யோகத்தைக் கற்றுத்தந்தார். இது போல் வாழ்பவர்கள் உங்கள் நகரங்களில் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள் அவர்களை அணுகுங்கள்,

இதைக் கற்றுக் கொள்ள என்ன தேவை. மனம்.
மாற்றங்களை விரும்பும் மனம்.
நம்பிக்கை
பணம் தேவையில்லை.
மதம் தேவையில்லை.
மறைகள் தேவையில்லை
ஓபன் மைண்ட் மட்டும் தான் தேவை

அகத்தியர், திருமூலர், போகர், பாபாஜி போன்ற சித்தர்கள் குண்டலினி யோகிகள்.

Photobucket - Video and Image Hosting

சமகலத்தவர்களில் நம்மாளு ஓஷோ, கோபி கிருஷ்ணா என்ற காஷ்மீரத்து சைவர் ஆகியோரின் எழுத்துகள் உலகில் பிரசித்தமானவை.

மேல்நாட்டு மனோதத்துவ வல்லுனர்களும், மருத்துவ வல்லுனர்களும், இறையியல் வல்லுனர்களும் எழுதிய புத்தகங்கள் இணையத்திலும் நூல் நிலையங்களிலும் கிடைக்கின்றன.

அனுபவத்தால் மட்டும் உணரகூடிய ஆன்மிக விஞ்ஞானத்தின் ஒரு மிகச் சிறிய அறிமுகமே இது.

பி.கு. தயவு செய்து குண்டலினி அனுபவம் பெற்றவர்கள். தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

57 comments:

  1. நல்ல தகவல்கள்.

    >>அகத்தியர், திருமூலர், பாபாஜி...
    பாபா சொன்ன பாபாஜி?

    ReplyDelete
  2. கால்கரி அய்யா,

    அசைவ உணவுக் குறிப்பிலிருந்து குண்டலினிக்கு தாவீட்டீங்களே?
    Amazing Range..

    பாலா

    ReplyDelete
  3. அதே பாபாஜி....இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இயற்பெயர் நாகராஜ்

    ReplyDelete
  4. bala, வீட்டிலே இருக்கிற மூணுபேருக்கு 27 interest என்ன பண்றது

    ReplyDelete
  5. சிவா,

    குண்டலினி யோகப்பயிற்சிக்கு முறையான அனுபவமுள்ள குரு மிக மிக அவசியம்.

    குண்டலினி சக்தி மேலெழும் போது அது முறையாக சூர்யநாடி வழியாக மேலேறி வருதல் அவசியம்.

    ஞானம் பெறுவதற்கு சூர்யநாடி வழியாக குண்டலினி சக்தியை சரியான உடலியல் பாதை வழியாக குருவானவர் கண்காணித்து அமரும் நிலை, யோக முறைகளில் மாற்றம் செய்வார் இது மிக மிக அவசியம்.

    டெக்னிகலாக 50ஆம்பியர் ரேட்டிங் உள்ள கேபிளின் வழியே 45 ஆம்பியர் கரண்ட் சக்தி பயணிக்கலாம் சூர்யநாடி அதிக சக்தியைத் தாங்க வல்ல உடலியல் கிரிட்!

    குண்டலினி யோகத்தைச் சுயமாய்ச் செய்ய விழையும்போது குண்டலினி சக்தி சந்திரநாடி வழியே பயணித்து மேலெழுந்தால் அது மனம் பிறழ்ந்து போக வாய்ப்புகள் உள்ளது.

    டெக்னிகலாக 50 ஆம்பியர் கரண்ட் சக்தியை 35ஆம்பியர் வல்லமையுள்ள கேபிள் கிரிட் வழி பயணிக்கச் செய்யும் போது கிரிட் ப்ரேக்டவுன் ஆவது சர்வநிச்சயம்.

    குண்டலினி சக்தியை எழச்செய்யுமுன்பு நமது Body, Mind, Intellect என்ற குண்டலினிசக்தி பயணிக்கப்போகும் மீடியத்தை மராமத்து செய்து தயாராக்க வேண்டியது மிக அவசியம்.

    இந்த BMI orientationக்கு பகவத்கீதை, வேதநெறிகள் படித்து அதன்படி நடந்து harmonyல் மனதை தயார் செய்தபின்பு குண்டலினி யோகத்திற்கு வரவேண்டும்.

    ஆர்வக்கோளாறில் முறையான குருவின் வழிகாட்டல் இல்லாது சுயமாய் ஆரம்பித்தால் " நல்லா படிச்சு நல்லவேலையில இருந்தாப்ல, யாரோ செய்வினை செஞ்சுட்டாங்க போலிருக்கு பகல்ல நட்சத்திரத்தோட பேசிக்கிட்டு திரியுறதப் பாருங்க!" என்றாகவும் வாய்ப்பிருக்கிறது!

    அன்புடன்,

    ஹரிஹரன்

    ReplyDelete
  6. பாஸ்,
    பெரிய ஆல்ரவுண்டர் நீங்க :) எல்லா விஷயத்தையும் டச் பண்ணறீங்க ! நன்றி !

    ReplyDelete
  7. வணக்கம் கால்கரி சிவா,

    நட்சத்திர வாரத்தில் எல்லா துறையிலும் கலக்குவது என்று முடிவு கட்டிடிங்க போல இருக்கே.

    பதஞ்சலி தான் யோக வித்தையின் குரு , அவர் தான் குண்டலினி யோகம்லாம் அறிமுக படுத்தியவர். நம் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளது அதன் வழியாக தான் நம் உயிர் பிரியும். நம் உச்சம் தலையில் ஒரு துவாரம் மூடியே இருக்கும் அதனை திறந்து அதன் வழியே உயிர் பிரிந்தால் மோட்சம் உறுதி என்பார்கள் அதற்கு கபால மோட்சம் என்று பெயர் அதற்கு குண்டலினி பயன்படும்.

    குண்டலினி சாத்தியப்படுத்துவருக்கு அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பார்கள் , அவர்களுக்கு தனஞ்செயன் என்று சொல்வார்கள் மகா பாரதத்தின் அர்ஜுனனுக்கு தனஞ்செயன் என்றும் ஒரு பெயர் உண்டு அவனும் யோகியே.

    இந்த குண்டலினியில் தேர்ச்சிப்பெற்றவர்கள் அனைவரும் மகான்களே , நீங்கள் சொல்லாமல் விட்ட சில பெயர்கள்,
    ஸ்வாமி விவேகானந்தர், பசும்பொன் முத்துராமலிங்கம் , ராமலிங்க அடிகல், வினோபாபா ஆகியோர்களும் குண்டலினி யோகிகள் தான்.

    குண்டலினி செய்பவர்கள் விந்து சம்ரக்க்ஷனம் செய்ய வேண்டும் அதாவது பிரம்மச்சாரியம் எனவே தான் பலர் இதனை செய்வது இல்லை.

    வஜ்ராசனத்தில் அமர்ந்து விந்துவை முதுகு தண்டுவடத்தில் உள்ள சிறு துவாரம் வழியாக உச்சம் தலையில் உள்ள முகுலம் வரை கொண்டு செல்வது தான் குண்டலி யோகம். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் தேஜசுடன் இருப்பீர்கள்.

    ReplyDelete
  8. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

    அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்கள்.

    இந்த சக்கரங்களுக்கும் (energy centers) நாளமில்லாச் சுரப்பிகளுக்கும் (endocrine glands) உள்ள தொடர்பு பற்றிய நம் முன்னோர்களின் அறிவு பிரமிக்க வைக்கும் ஒன்று. இந்து மதக் கோட்பாடுகளில் அறிவியலும் ஆன்மீகமும் மிக மிக நெருங்கி வரும் இடம் இது.

    "உள்ளமே கோயில் ஊனுடம்பு ஆலயம்". சக்தி வழிபாட்டிலும், நம் பண்டை நூல்களிலும் இதைப் பற்றி ஏராளமான குறிப்புகள் உள்ளன.

    உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு (body-mind connection) பற்றிய நம் முன்னோர்கள் ஞானம் அதி அற்புதமானது.

    ReplyDelete
  9. சிவா,

    நல்ல கட்டுரை. ரொம்ப பிரயோசனமாக இருக்கும். இங்கு தொகுத்து வழங்கியமைக்கு தாங்களுக்கு ஓர் நன்றி.

    ReplyDelete
  10. இன்னும் பதிவைப் படிக்கலை அண்ணா. விரைவில் படித்துவிடுவேன்.

    வீட்டில் இருக்கும் மூன்று பேரில் யாருடைய இன்ட்ரெஸ்ட் இது என்று மட்டும் சொல்லுங்கள். :-)

    ReplyDelete
  11. //
    கபால மோட்சம்
    //

    ஹெல்மெட் போடாம மண்டையில அடிபட்டு ஆக்ஸிடண்டுல சாவுறானுங்களே.. அவங்களும் இதில் அடக்கமா?

    ReplyDelete
  12. சிவா சார்,
    ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.இந்த மாதிரி பதிவெல்லாம் பாக்க/படிக்க.

    இந்திய மெய்ஞானத்தின் உச்ச நிலை, குண்டலினியை மேலெலுப்புவதுதான்.
    சந்தியாவந்தனம், பிராணாயாமம், யோகாசனம், தியானம், பஜனை இது எல்லாமே அடிப்படையான பயிற்சிகள்தான்.

    வாழ்க்கையில், மிக திறமைசாலிகள்.. இந்த சக்தி சிறிதளவேனும் கிளறப் பட்டதால், அந்த திறமையை அடைந்தார்கள்..என்பது பெரியோர்கள் வாக்கு.

    யோகிகள், ஞானிகள் அந் நிலையை அடைய காரணம், அவர்களின் குண்டலினி சக்தி விழிப்புற்றதுதான்.

    நான், இதற்காக சிறிது முயற்சி செய்துள்ளேன்.ஆக்ஞை சக்கரத்தில் அதிர்வுகள் உணர்ந்துள்ளேன்.ஆனால் இது தியானம் செய்யும் அனைவருக்கும் ஏற்படுவதுதான்.

    மிக தீவிரமான முயற்சியில் ஈடுபடுத்திக் கொண்டபோது, பெற்றோரால் கால்கட்டு போடப்பட்டேன்.

    இப்போது sri sri யோகா மட்டும்தான்.
    என்றென்றும் அன்புடன்,
    பா. முரளி தரன்.

    ReplyDelete
  13. //வாழ்க்கையில், மிக திறமைசாலிகள்.. இந்த சக்தி சிறிதளவேனும் கிளறப் பட்டதால், அந்த திறமையை அடைந்தார்கள்..என்பது பெரியோர்கள் வாக்கு.
    //

    உண்மை முரளி,

    யேசு, முகமது நபி முதல் நம் ஜனாதிபதி அப்துல் கலாம் வரை இந்த யோகநிலையை அடைந்தவர்கள் என ஒரு நம்பிக்கை. அப்துல் கலாம் அவர்கள் பிரம்மகுமாரிகள் இயக்கதில் சேர்ந்து இந்த ராஜயோகத்தை கற்றார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

    எந்த ஒரு யோகமும், தியானமும், கடவுள் வழிபாடுகளும் கடைசியில் வந்து சேருவது இந்த யோகத்தில் தான்

    நன்றி முரளி வருகைக்கு

    ReplyDelete
  14. குமரன்,

    குண்டலினி யோகத்தை கற்றுக் கொடுக்கும் குருவை பொறுத்தது. ஆனால் எல்லா குருக்களும்
    தொடக்கநிலையில் குண்டலினியை கற்றுக் கொள்பவர்களுக்கு அசைவ உணவை தவிர்க்குமாறு கேட்டுகொள்கிறார்கள்

    அசைவு உணவு குண்டலினி எழுச்சியை மட்டுபடுத்துகிறது/தாமதப்படுத்துகிறது.
    ஆனால் எல்லா நிலைகளையும் கடந்த ஞானிகளுக்கு உணவு ஒரு பொருட்டாகாது.

    ReplyDelete
  15. வஜ்ரா,
    நீங்கள் சொல்வது கபால மோட்சம் அல்ல,கபால/அகால மரணம்.

    ReplyDelete
  16. ஆக, கபால மோட்சம், யோகநிலை எல்லாம் பெண்களுக்கு கிடையாதுங்கறீங்க :-)

    ReplyDelete
  17. உஷா மேடம், நான் இது பெண்களுக்கு இல்லை என சொன்னேனா? இல்லை யோகிகளின் பெயர்களில் பெண்களின் பெயரையே குறிப்பிடவில்லை என்பதினாலா? புரியவில்லையே

    ReplyDelete
  18. ஏங்க இந்த சித்தர்கள் கூடுவிட்டு கூடு பாய்ந்து வித்தை காட்டினது ...உந்த குண்டலினி யோகத்தினலா... திருமூலர் உந்த விளையாட்டை காட்டினதாக கேள்வி..

    இங்கை மேற்குலகம் Tm meditation தான் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கபட்டதாயும்... ஏற்று கொள்ளக்கூடியது எண்டு தம்பட்டம் அடிக்கிறான்கள்...

    ReplyDelete
  19. ஞானவெட்டியான் ஐயா, ஒரு சின்ன முயற்சிதான். நீங்கள் சொன்னபாடல் எதோ சித்தர்கள் பாடியது போல் இருக்கிறது. நன்றி

    ReplyDelete
  20. ஹரிஹரன், மிக உண்மை. ஒரு நல்ல குருவின் வழிகாட்டுதல் மிக மிக அவசியம்

    ReplyDelete
  21. எ.அ.பாலா, அதெல்லாமில்லேங்க ஜாக் ஆப் ஆல் ட்ரேட்ஸ் மாஸ்டர் ஆப் நன் என வச்சிகிலாமா.

    சின்ன வயசிலெ குவிஸ் என்று அசட்டு போட்டிகளில் பங்கு கொள்ள எல்லா புத்தகங்களையும் கொறிக்க போக வந்தது வினை. குவிஸ்லே ஜெய்த்ததே இல்லை ஒரு புத்தகமும் புல்லா படித்ததும் இல்லை

    ReplyDelete
  22. வவ்வால், உங்களின் அர்த்ததிலிருந்து வேறுபடுகிறேன். விந்து தலைக்கு ஏற உடலமைப்பில் வழி இல்லை.

    அந்த உடல் சிலிர்க்கும் உணர்ச்சிகளை தலைவரை எடுத்து செல்வதை சிலர் அவ்வாறு கூறுவர். சிலர் இதை உள்ளே நோக்கி பாயும் பரவசம் என்றும் சொல்வர்.

    மற்றபடி தந்திரா செக்ஸ்யும் குண்டலினியை எழுப்பும் என்ற அபிப்ராயமும் உண்டு

    அதனால் தான் நான் என் கட்டுரையில் இதை ஒரு ஆன்மிகத்தை முன் வைத்து உணர்வுகளை பெறுதல் என்றெழுதினேன்.

    செக்ஸ்ஸிற்கு இருவர் வேண்டும் அது இன்னொரு பாட்டில் நெக். இருவர் சேர்ந்து குண்டலினியை எழுப்பி ஞானம் பெறுவது என்பது மிக கஷ்டமானதும் சில தேவைஇல்லாத ப்ரச்னைகள் தோற்றுவிக்கும்

    இறையுணர்தல் என்பது மிக அந்தரமானது. தனியொருவனுக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கு பந்தமிது

    ReplyDelete
  23. ஜெயஸ்ரீ, தங்கள் வருகைக்கு நன்றி. நிஜமாக நம் முன்னோர்களின் மேல் எனக்கு மரியாதை வர ஆரம்பித்தது. இந்த சப்ஜெக்டை படிக்க ஆரம்பித்த பிறகுதான்

    ReplyDelete
  24. தெக்கிகாட்டன் அவர்களே, நன்றி

    ReplyDelete
  25. சின்னகுட்டி, எனக்கு தெரியவில்லை கூடு விட்டு கூடு பாயவதைப் பற்றி.

    டி.எம் குண்டலினியை நோக்கி ஒரு படி

    ReplyDelete
  26. Anonymous7:38 PM

    யாருமே எதிர் வாதம் வைக்காததால சும்மா வில்லி வேல பண்ணலாமேன்னு, ஹி ஹீ :)
    ---------
    நான் ரொம்ப அலசி ஆராய்ஞ்ச டாபிக். பன்னண்டு வயசுல ஆரம்பிச்சாலும், எழுபது வயசுக்கு மேல் உள்ள ஆளுங்கள்கிட்ட கேட்டுருக்கேன். விவேகானந்தர் சிக்காகோவிலருந்து அவர் நண்பர்களுக்கு அனுப்புன தனிப்பட்ட கடிதங்களைப் படிச்சுப் பாருங்க, உண்மை மனிதனின் வார்த்தைகள் அழகாய் வரும், யோகமும் இருக்காது குண்டலினியும் இருக்காது. ஜெ.கே. அவர் தம்பி இறந்து அழுது அழுது எழுதினவற்றையெல்லாம் படிச்சுப் பாருங்க, கலங்கிப் போயிருவீங்க. கலிஃபோர்னியாவில அப்பவே அவங்க இரண்டு பேரையும் வச்சு ஆராய்ச்சிகள் பல நடந்தது. ஜெ.கே வையும், விவேகானந்தரையும் சிறந்த மனிதர்களா நான் மதிக்கிறேன், யோகிகள் இல்ல, மதத்தின் பிடியில் மாட்டிய மாமனிதர்கள். பிராணாயமம் கட்டாயம் மன அமைதி தரும். மோட்சமெல்லாம் புவி வாழ்கையை மதிக்காதவங்களுக்குத்தான். தாயுமானவர் கூட அற்புதமான மனிதர் - சமய முரண்பாடுகள் தாண்டி யோசிச்சாருன்னு உயிரோட எரிச்சு, ஜோதியாயிட்டாருன்னு வில்லனுங்க சொல்ல, அவரக் கும்பிடுற முட்டாளுங்களும் நம்பிட்டானுங்க. திருமந்திரமும் விழுந்து விழுந்து படிச்சிருக்கேன். அவருக்குத் தெரிஞ்ச தாவரவியலுக்கு நோபல் பரிசே கெடைச்சிருக்கணும், அவரையும் வெறும் மாயாவியாப் பாக்குறது கொடுமை. திருவாசகத்தில மனிதம் தெரியுதா மோட்சம் தெரியுதா? மாணிக்கவாசகரக் கூட மனுஷனாப் பாக்காத சமய பைத்தியங்கள் நாம சில நேரங்கள்ல. என்னைப் பொறுத்தவரைக்கும் ஏசுவும், புத்தரும், தெளிவான மனிதர்களே. அவர்களுடைய தெளிவையும் மனிதத்துவம் துலங்கும் சொல்லாடல்களும் வெறும் சமய நெறியாப் போனது நம்ம எல்லாருக்கும் பெறும் இழப்பு.
    ------------
    இப்படியாக பயங்கர வாதம் வைத்தார் பேட்டை சிங்கி! அய்யோ ஆப்பு வருதா நானு எஸ்கேப்!!! பகவானே, ஏடுகொண்டலவாடா, ஏழுமலையானே, குருவாயூரப்பா, பழம் நீ அப்பா, வி நாயகரே, யாராச்சும் காப்பாத்துங்க! :))))) ...

    ReplyDelete
  27. அன்பு சிவா,
    //ஞானவெட்டியான் ஐயா, ஒரு சின்ன முயற்சிதான். நீங்கள் சொன்னபாடல் எதோ சித்தர்கள் பாடியது போல் இருக்கிறது. நன்றி//

    ஆம். திருவள்ளுவர்தான் சொல்லியிருக்கிறார். இந்த குண்டலினி இரு வகைப்படும்.
    தூலம்- தாங்கள் குறிப்பிட்டபடி விளக்குவது.
    சூக்குமம் - எல்லா ஆதாரத் தானங்களும் தலைக்குளே இருக்கிறது மூலாதாரம் முதல்).
    அங்கிருந்து யோகம்(புணர்ச்சி) செய்து உணருதலே சரியான வழி. இதையே வீடு கட்டுவது என்பார்கள் சித்தர்கள்.
    வழிகாட்டி மிக அவசியம்.

    ReplyDelete
  28. இது விளையாட்டாக செய்யக்கூடிய காரியமில்லை என்று தெரிகிறது. ஆனால் இந்த information age இல் என்னெனவோ மாயங்கள் நடக்கின்றன. உதாரணமாக, http://www.sahajayoga.org/experienceitnow/default.asp என்ற லிங்கை சொடக்கினால், இண்டெர்நெட் வழியாகவே தியானம் செய்து, குண்டலினியை எழுப்பலாம் என்று சொல்கிறார்கள். (broadband connection இருந்தால் இன்னும் வேகமாக எழுமோ?) இது ரொமப tempting ஆக இருந்தாலும் ஏதாவது முயற்சி செய்யப்போய் வினையாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. நித்யானந்தா சுவாமி கூட ஒரு வாரம் meditation workshop நடத்துகிறார். அதில் குண்டலினி எழுப்பப்படுவதாக சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கையில் குண்டலினி எழுச்சியின் மூலம் autism என்ற நோய் குணமாக சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானபூர்வமாக சொல்கிறார்கள்.

    ReplyDelete
  29. மதுரா,

    என்ன சொல்லவர்ரீங்க. இதெல்லாம் சும்மா. மதம் யோகம் குண்டலினி சொல்லி ஜல்லியடிக்கிறாங்க. எல்லாமே மனிதங்க தான். மத்தவங்க தான் அவங்களே தெய்வமாக்கிட்டாங்க அப்டீங்கிறீங்க.

    நீங்க குண்டலினி பற்றி புத்தகங்களை படிச்சுட்டுதான் சொல்றீங்களா? இல்லே பயிற்சி பண்ணி அனுபவிச்சு சொல்றீங்களா?

    ReplyDelete
  30. ப்ளெமிங்கோ, இது ஒரு Guided Meditation. இதனால் ஒரு பக்கவிளைவும் இருக்காது. பயமில்லாமல் ஒரு முறை முயற்ச்சி செய்து பாருங்கள். நீங்கள் நினைப்பது போல் குண்டலினி அவ்வளவு சீக்கிரம் எழுந்து விடாது. குண்டலினியால் பல நோய்கள் குணமாவது உண்மைதான் என விஞ்ஞான பூர்வமாக நிரூபணமாகியுள்ளது என்று படித்துள்ளேன்.

    ReplyDelete
  31. சிவா, ஆதாரத்திலேயே குழப்பம் இருக்கே :-) பெண்கள் எதை கபாலத்துக்குக் கொண்டுப்போவது? அதனால்தான் பெண்களுக்கு
    இதெல்லாம் கிடையாதா என்றுக் கேட்டேன்.

    மதுரா, கவலையேபடாதீங்க. நான் இருக்கிறேன். நீங்க சொல்லுங்க, பெண்களுக்கு கபால மோட்சம் கிடைப்பது எப்படி? ஊட்டுகாரர் மண்டையில் தட்டினால் என்றெல்லாம் பதில் சொல்லக்கூடாது :-) அதிலும் இந்த மாதிரி மேட்டரில் எல்லாம் வெள்ளைக்காரன் கூட நற்சான்றிதழ் தந்துட்டான் என்ற வரி கட்டாயம் வேண்டும் !

    ReplyDelete
  32. வணக்கம் சிவா!

    நான் எந்த இடத்திலும் இதனை செக்ஸ் என்றோ இருவர் சேர்ந்து செய்ய வேண்டும் என்றோ சொல்லவில்லையே! ஞானவெட்டியான் கூறிய பாடலில் கூட இந்த விந்து பற்றி வருகிறது பாருங்கள்

    //மேற்சதுரமானமயேசுபரனாருக்கும் விந்துவதினின்றிலங்குஞ்சதாசிவற்கும்
    தீர்க்கமுடன் வரவற்குக்கட்டும்வீடு செப்புகிறேன் ஜெகச்சோதி //

    ராமலிங்க அடிகள் இதனையே குண்டலினிப்பால் வேண்டும் வெண்ணிலாவே குண்டலினிப்பால் வேண்டும் வெண்ணிலாவே எனப்பாடி இருப்பார்.

    திருமூலர் பாடலில்

    ஈஸ்வர ஆண்டுபிறப்பதேன் உயிர் ஈசன் அடி அடைவதேன் என்று பாடி இருப்பார்.

    ஈஸ்வர ஆண்டு தாது ஆண்டு முடிந்ததும் பிறப்பது, மனித உடலில் தாது(விந்து) உற்பத்தி நின்று விட்டால் மரணம் என்பது இதன் பொருள்.

    உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்பதும் இதனையே மறைமுகமாக சொல்வது.

    குண்டலினி நம் உயிர் வாழும் காலம், இறக்கும் காலம் இவற்றை கட்டுப்படுத்த உதவும். அதற்கு சிறப்பான பயிர்ச்சி தேவை.

    ReplyDelete
  33. அன்பு நண்பர்களே!
    தவறாகப் பொருள் கொண்டுவிட்டீர்களே!
    ஆணுக்கு விந்து என்றால் பெண்ணுக்கு அண்டம்(முட்டை). இரண்டும் ஒன்றுதான். ஆன்மிகப் பயிற்ச்சிக்கு(யோகம்) ஆண், பெண் எனும் வேறுபாடு கிடையாது. இருபாலருக்கும் விதியும்(சட்டமும்) பலனும் ஒன்றே.

    ReplyDelete
  34. வவ்வால் சார், தவறுக்கு வருந்துகிறேன். விந்து என்றதும் செக்ஸிற்கு தாவி விட்டேன்.

    விந்து தலைக்கேற நம் உடலமைப்பில் வாய்ப்பில்லை. இது ஒரு உணர்வுதான் என்பது என் அபிப்ராயம்.

    ReplyDelete
  35. வவ்வால், உணர்வு என்பதை சக்தி என்று படிக்கவும்

    ReplyDelete
  36. உஷா மேடம், உங்களுடைய கேள்விக்கு ஞானவெட்டியான் ஐயா கூறிவிட்டார்கள்

    நீங்களும் மதுரா மேடமும் வாங்க. எனக்கும் தைரியமளிக்க எனக்கு பின்னாடி இருக்கிறது யார் தெரியுமில்லே. எங்க வூட்டுகார அம்மா.

    நாங்க "மதுரே" :)

    ReplyDelete
  37. //சூக்குமம் - எல்லா ஆதாரத் தானங்களும் தலைக்குளே இருக்கிறது மூலாதாரம் முதல்).//

    ஞானவெட்டியான் ஐயா, இதைப் பற்றி நாங்கள் இதுவரைக்கும் படித்ததில்லை. எளிய முறையில் நாங்கள் படிப்பதற்கு ஏற்றவாறு ஏதாவது புத்தகங்களை சிபாரிசு செய்ய முடியுமா?

    ReplyDelete
  38. நம் இதய தசைகளை 7.5 Hz அலைவரிசையில் அதிர செய்தார்.

    How he has arrived to 7.5 Hz?

    நான் 4.5க்கு கொண்டு வந்தால் சன் எஃப் எம் கேட்கிறது.

    ReplyDelete
  39. விந்து தலைக்கு ஏற உடலமைப்பில் வழி இல்லை.

    மேலேறுவது விந்து இல்லை. ஓஜஸ்.

    பன்னிரெண்டாண்டு ப்ரஹ்மச்சரியம் காப்பவருக்கு மேதா நாடி ஏற்படும். ஓஜஸ் ஷக்தியானது மேலேறும் என்பது ப்ரஹ்மச்சரியத்திற்கு காமத்தின் அடிப்படையில் விளக்கம் அளிப்பவர்களின் நம்பிக்கை.

    அத்வைதம் பின்பற்றுபவருக்கு ப்ரஹ்மத்தில் லயித்திருப்பது, ப்ரஹ்மத்தை அறிய விரும்புவது ப்ரஹ்மச்சரியம். சக்கரங்கள் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை.

    ReplyDelete
  40. என் நண்பர் ஒருவன் தியானத்திலிருந்தபோது திடீரென்று முதுகுத் தண்டிலிருந்து ஏதோ மேலேறுவது புலப்பட்டது. சிறிது சிறிது சிறிதாக மேலேறிய அது ஆக்ஞாவிற்கும், ஸ்வாதிஷ்டானத்திற்கும் நடுவில் வந்தபோது சுரீர் என்று வலி. எறும்பு.

    இதை கேள்விப்பட்டதிலிருந்து அவர் ஏதேனும் அறிவுரை கொடுக்க முயன்றால் எல்லாரும் அவரை, வாயையும், குண்டலினியையும் மூடிக்கொண்டு போகச் சொல்லுகிறார்கள்.

    ReplyDelete
  41. //How he has arrived to 7.5 Hz?

    நான் 4.5க்கு கொண்டு வந்தால் சன் எஃப் எம் கேட்கிறது//

    ம்யூஸ், அவரைதான் கேட்க வேண்டும். அவர் ஆய்வின் முடிவுரைதான்

    4.5 இதயத்திலா அல்லது உங்கள் ரேடியோவிலா.

    FM அலைவரிசகள் 89 மெகா ஹெர்ட்ஸ் டூ 104 என்று நினைக்கிறேன். அதற்கு கீழே போலீஸ் ரேடியோ மேலே டிவி ஆடியோ என்று அர்த்தம்

    ReplyDelete


  42. 5. உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெறு
    6. கவனி
    7.குவி
    8 தியானி


    தாங்கள் பட்டியலிருந்தவற்றில் மேற்சொன்னவற்றை நான் மிகச் சில மாற்றங்களோடு கீழே தருகிறேன்:

    5. உள்முகமாகு
    6. கவனமாகு
    7. தியானி
    8. ஸமாதி நிலையடை

    தங்கள் கருத்தென்ன?

    ReplyDelete
  43. நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

    எதனையுமே தெரிந்து கொள்ளாமல் குண்டலினி போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

    மாறாக, மன அமைதியை விரும்புபவர்கள், கண்களை மூடி நிதானமாக மனதில் எழும் எண்ணங்களை சீர்படுத்தினாலே போதுமானது. விவேகானந்தர் கூறியது போல், "All evils will come to your mind, when you close your eyes (sit for meditation)", ஆரம்பத்திலேயே எண்ணங்களை அடக்க முடியவில்லை என்று வருந்தி முயற்சியை கை விட தேவையில்லை. அடக்க நினைக்காமல், எண்ணங்களை மூன்றாம் மனிதனாக அமர்ந்து கொண்டு பார்த்தாலே போதுமானது. (அதாவது எண்ணங்களால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்). மனம் அமைதியடையும். சிரமம் தான்.

    அல்லது பிடித்தமான இசையை கேட்டாலே போதுமானது.

    நான் புதிதாக ஒன்றும் கூறிவிடவில்லை. குறிக்கோள் இல்லாமலோ / முறையானா வழிகாட்டுதல் இல்லாமலோ சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது என்பது எனது கருத்து.

    எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. புவியில் இருந்து கொண்டு எதற்காக முக்தி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது தான். இறப்பு மற்றும் பிறப்பினை அறிந்தவர்கள் போல் முக்தி பற்றி பேசுவதெல்லாம் எவ்விதத்தில் சரி?.

    அவ்வளவு மோசமானதா இந்த பூமி?

    ReplyDelete
  44. ம்யூஸ், நல்ல மொழிபெயர்ப்பு. உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன்.

    ReplyDelete
  45. ஸ்ருசல், வாங்க. ரொம்ப நாளா ஆளைக் காணாம்.

    சரியான கேள்விசார். பூமி அற்புதமானது என்பதில் சந்தேகமே இல்லை

    ReplyDelete
  46. அன்பு ஸ்ரூசல்,
    //குறிக்கோள் இல்லாமலோ / முறையானா வழிகாட்டுதல் இல்லாமலோ சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது என்பது எனது கருத்து.//

    அதுவே உண்மை.

    //எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. புவியில் இருந்து கொண்டு எதற்காக முக்தி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது தான். இறப்பு மற்றும் பிறப்பினை அறிந்தவர்கள் போல் முக்தி பற்றி பேசுவதெல்லாம் எவ்விதத்தில் சரி?.

    அவ்வளவு மோசமானதா இந்த பூமி?//

    அப்படி யார் கூறினார்கள். யோகம் என்றாலே புணர்ச்சி. ஆணும் பெண்ணும் கலந்தால் சிற்றின்பம். சூரிய நாடியும் சந்திர நாடியும் புணர்ந்தால் பேரின்பம். அதை வடமொழியில் ஸுகம் என்பர். அது வேண்டாமென யார் சொல்லுவர். அதற்குதவியாக மனிதப் பிறப்பெடுத்துள்ள நாம் அந்தப் பேரின்பத்தை உருசித்துவிட்டால் விடமாட்டோம். யாரோ, இது தெரியாமல் முக்தி என்று சொன்னதையெல்லாம் நம்பாதீர்கள்.

    அன்பு சிவா,
    //ஞானவெட்டியான் ஐயா, இதைப் பற்றி நாங்கள் இதுவரைக்கும் படித்ததில்லை. எளிய முறையில் நாங்கள் படிப்பதற்கு ஏற்றவாறு ஏதாவது புத்தகங்களை சிபாரிசு செய்ய முடியுமா?//

    ஞானக் குறள்:

    நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
    எல்லையில் லாத சிவம்.

    நல்லவற்றைக் கூறும் பல ஞான நூல்களைப் படிப்பதால் மட்டும் எல்லையில்லா
    சிவத்தையுணர்தல் அரிது.

    சச்சிதானந்த சுவாமிகள்:

    "ஏட்டைப் படித்திங் கிறுமாப்பா லென்னபயன்
    நாட்டம் படித்தன்றோ நாமறுப்பம் - வாட்டமெலாம்
    எச்சனனத் தேனு மிரும்பொருளை நாடாத
    எச்சத்தா லன்றோ இவை."

    அருணகிரியந்தாதி:

    "கற்றதனாற் றொல்லைவினைக் கட்டறுமோ நல்லகுலம்
    பெற்றதினாற் போமோ பிறவிநோய் - உற்றகடல்
    நஞ்சுகந்து கொண்டருணை நாதரடி தாமரையை
    நெஞ்சுகந்து கொள்ளா நெறி."

    சிற்றம்பல நாடிகள்:

    "தற்கம் படித்துத் தலைவெடித்துக் கொள்ளுமதைக்
    கற்கநினையா தருளைக் காட்டுங் கருணையனோ."

    சச்சிதானந்த விளக்கம்:

    "கோடிபல நூலறிவு வேதமுறை பேசினுங்
    குருபாதம் வெளியாகுமோ."

    பிரம்மகீதை:

    "வேதமாகம புராணமிருதிகள் வேறா மார்க்க
    ரோது மாகமங் கடர்க்கமொன்றோடொன் றெவ்வாதாகு
    மீதெலா மொக்கப் பண்ணலாவதன் றிதயதுக்க
    மாதலா லனைத்தும் விட்டிங்கனைத்து மாஞ்சிவத்தை பார்ப்பான்."

    திருவருட்பிரகாச வள்ளலார்:

    "சதுமறையாகம சாத்திரமெல்லாஞ் சந்தைப்படிப்பு நஞ் சொந்தப்படிப்போ
    விதுநெறி சுத்தசன் மார்க்கத்தின் சாகாவித்தையை கற்றனனுத் தரமெனுமோர்
    பொதுவளர் திசைநோக்கி வந்தனனென்றும் பொன்றாமைவேண்டிடிலென்றோழி நீதான்
    அதுவிது வென்னாம லாடோடிபந்து வருட்பெருஞ்சோதி கண்டாடோடி பந்து."

    சிவபோதசாரம்:

    "கற்குமடப் பட்டுமிகக் கற்றவெலாங் கற்றவர்பாற்
    றற்கமிட்டு நாய்போலச் சள்ளிடவோ - நற்கருணை
    வெள்ள மொடுங்கும் விரிசடையார்க் காளாகி
    யுள்ள மொடுங்க வல்லவோ."

    சசிவன்ன போதம்:

    "ஆகம விதங்க ளறிவார்கள் பரமறியார்
    யோகமொ டுறங்கு மவரேபர முணர்ந்தோர்
    புராண மிதிகாச மெவையும்பொருளனைத்தின்
    பிராண நறியா துளவிடத்திவை பிதற்றே."
    ஆக சாத்திரங்களைப் படிப்பதால் மட்டும் பலனில்லை. செயல் தேவை.

    கல்வி ஆதாரம்.
    செயலே முக்கியம்.


    "தன்னை யறிந்தால் தலைவனைக் காணமுடியும்"

    ReplyDelete
  47. //கல்வி ஆதாரம்.
    செயலே முக்கியம்.


    "தன்னை யறிந்தால் தலைவனைக் காணமுடியும்"
    //

    ஐயா,

    நன்றாக சொன்னீர்கள். அடுத்து செயல்தான். மிக்க நன்றி

    அன்புடன்

    சிவா.

    பி.கு. அடுத்த முறை இந்தியா வரும் போது திண்டுகல் வந்து தங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன்

    ReplyDelete
  48. அன்பு கரி்கால் சிவா,
    கட்டாயம் வாருங்கள். காத்துள்ளேன்.

    ReplyDelete
  49. சிவா,

    முக்தி, தன்னையறிதல் இவை எல்லாம் இருக்கட்டும். இவை போன்ற பெரிய விஷயங்களுக்கு முன்பாகவே இயற்கை/இறை நமக்கு ஒரு ஸுகத்தை காட்டுகிறதே.

    தியான ஸுகம். எல்லா போதையிலும் சிறந்த போதையது. சும்மா இருக்கும் ஸுகமே அனைத்திலும் பெரும் ஸுகம். சிறிய முயற்சியிலேயே (முயற்சியேதும் செய்யாமலிருப்பதாலேயே) கிடைக்கும் அந்த ஸுகம்தாண்டி பெரிய ஸுகம் ஏது?

    ReplyDelete
  50. //சும்மா இருக்கும் ஸுகமே அனைத்திலும் பெரும் ஸுகம்//

    ஆமாம் இதைதான் டில்பெர்ட்டின் தந்தை ஸ்காட் ஆதம்ஸ் சொல்லுவார். வேலைப்பார்ப்பது கடினமான செயல் அதனால் தான் வேலைப்பார்க்க காசு கொடுக்கிறார்கள் என்று

    ReplyDelete
  51. எங்கே தாய்குலங்களான உஷா மேடமும் மதுரா மேடமும். கேள்விகளை கேட்டு விட்டு ஒடி போய்ட்டங்களே

    ReplyDelete
  52. சிவா அண்ணா. குண்டலினியைப் பற்றி மிக எளிதாக எழுதியிருக்கிறீர்கள். குண்டலினிக்கும் விந்திற்கும் தொடர்பு இல்லை என்ற என் புரிதலைச் சொல்லலாம் என்று வந்தேன். அதற்குள் பெரியவர்கள் எல்லாம் வந்து சொல்லிவிட்டார்கள். சொல்லொற்றுமையை வைத்துக் கொண்டு பலரும் தவறாக நினைப்பது இது. உஷா மேடமும் அப்படியே தவறாக எண்ணிவிட்டார்கள் போலும்.

    ReplyDelete
  53. ஞானம் சாருக்குத்தெரியும் என நினைத்தேன் அவர் அதைப்பற்றி அதிகம் சொல்லவில்லையே.
    நல்ல செய்தி

    ReplyDelete
  54. Anonymous7:45 PM

    அழகாகவே போயிருக்கு வாதம்! சிவா, நல்ல தெளிவோட மனிதம் சேர்த்து பேசுறீங்க. மனைவியோடு சேர்ந்து துறவு நெறி வாதம் செய்வது உங்கள் இல்லறச் சிறப்பு. புவி வாழ்க்கை அழகானதே என்று ஒப்புக்கொண்டு, முக்தியின் மீது ஆர்வம் கொண்ட மனிதராகப் படுவதால், உங்களுடைய எண்ண ஓட்டம் அழகாய் இருக்கிறது.

    எனக்கு எந்த சொந்த அனுபவமும் இல்ல, ஆனா யாருக்காவது சொந்த அனுபவம் இருக்கான்னு நோண்டு நோண்டுன்னு பத்து வருஷத்துக்கு மேல அபாரமான ஆர்வத்தோட நோண்டி எடுத்தெருக்கேன், அத்தனை சமய மாமனிதர்களோட வாழ்கையையும். இன்னும் அப்பப்ப மூக்க நுழைச்சி பாக்குறது உண்டு - இங்கே பேசப்பட்ட நித்யானந்தாவும் நேருல பாத்தாச்சு - நல்லாத்தான் பேசுறாரு! :)... நிறையவே மடத்துக்குள்ளெல்லாம் நுழைஞ்சு, ஐ.ஐ.டி எல்லாம் படிச்சிட்டு குண்டலினி பண்ண வந்தவருட்டெல்லாம் கேட்டாச்சு! ஒருத்தரும் மனசைத் தொட்டு உண்மையா ஏதாவது இருக்கான்னு சொல்லுங்கன்னா கம்முன்னு ஆயிடுறாங்க! அவஞ் சொன்னான், இவஞ் சொன்னான்னு பெரிய பெரிய ஊரு பேரு, பாட்டு, மந்திரம் அம்புட்டும் சொல்லுவாங்க, ஆனா தானே உணர்ந்ததா யாரும் சொல்லல. என்ன பண்றது? ஆர்வத்தை விடல, ஆனா தெரியாத ஒண்ணை புரியாம ஒத்துக்கொள்ள வேண்டாம்னு தள்ளி நின்னு பாக்குறதுன்னு ஒதுங்கியாச்சு. யாராச்சும் நிஜமாவே நிஜமா எல்லா நிலையும் போனா எனக்கு சொல்லுங்க - நானும் தெரிஞ்சிக்கிறேன்!

    எனக்குப் புரியாததால் தவறென்று சொல்லக்கூடாதுன்ற கொள்கையினால, குண்டலினி முயற்சிகளை நான் தவறென்றும் நினைப்பதில்லை! சரியென்று சொல்ல அனுபவமும் இல்லை!

    பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  55. ***************************************************************************************************************

    ReplyDelete
  56. வணக்கம் உங்களுடைய கட்டுரை படித்தேன்
    குண்டலினி பற்றி வகுபபூ எடுத்து கொண்டு வருகிறேன்
    உங்களுடைய சந்தேககங்களுக்கு அணுகவும்

    cell: +91-9442426434
    e-mail: sriramanandaguruji@gmail.com

    ReplyDelete
  57. விவேகானந்தர் அந்தக் காலத்து self starter , go getter ..இந்தக்காலத்து enthusiyast எல்லோருக்கும் pioneer.
    such a great incomparable personality altogether..
    'Arise.. Awake..And stop not till the goal is reached.' என்று அடியெடுத்துக் கொடுத்த ஆசான்..
    அவரே குறித்த தினத்திலே தியானத்திலே முக்தி அடைந்தார் என்பதும்
    அதுகுறித்த விக்கிபீடியாவின் விளக்கத்தில் அவரது சீடர்கள் கூறியபடி பிரம்மரந்திரா( the aperture in the crown of the head ) என்று சொல்லப்படுகிற மூளை நரம்புப் பகுதி ரத்த நாள வெடிப்பைக் காரணமாகக் கொண்டு அவர் இயற்கை அடைகிறார் என்ற செய்தி உள்ளது....
    இந்த பதஞ்சலி யோகா, குண்டலினி என்று பசும்பொன் அய்யா அவர்களும் பயின்றதாகக் கேள்விப்பட்டதாக ஞாபகம்..
    இது குறித்த ஆர்வத்தில் எனது 21 டு 22 வயதிலே தொடர்ந்து சில மாதங்கள் தினம் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மெடிடேஷன் ட்ரை பண்ணி கொஞ்சம் கொஞ்சமாக உடல் மனம் என்று கொஞ்சம் தாண்டி பதஞ்சலி பற்றிய ஒரு பழைய புத்தகம் பார்த்து அதில் சொல்லப்பட்ட ஆசனங்களை அதிலே குறிப்பிட்டபடியிலான காலம் வரை செய்தேன்..பிராணாயாமத்தை சற்று வேறுபடுத்தி சொல்லப்பட்ட மூச்சுப் பயிற்சியாக அது இருந்ததாக ஞாபகம்..இப்போ சரியாய் ஞாபகம் இல்லை..
    எனக்கு இருந்த ஆர்வத்தினால் சுய முயற்சியினால் இந்த வேலைகளை செய்து பார்த்த காலகட்டங்களில் body mind coordination மாறிப்போகிறதும் உடல் ஏதோ இளகிப் போகிராற்போலே உணர்ந்தேன்..உடற்கட்டு தசைத்திமிரை இழந்து ஏதோ வேறு நிலைக்கு செல்வதாக உணர்ந்தேன்..இதைச் செய்ய செய்ய அந்த காலகட்டங்களில்
    கண்களுக்கு அதிக சக்தி கிடைப்பதாகவும் தலையைச் சுற்றி ஒளிவட்டமாகத் தோன்றுவதாகவும் உணரத்தொடங்கினேன்..
    பார்வையிலே இருந்தே நமது எண்ணங்களை அனுப்பி பதிலளிக்கும் அனுபவம் அந்த நேரத்தில் கிடைத்ததாக்கூட ஞாபகம் இருக்கிறது..
    பெண்கள் விஷ்யத்திலான ரொமான்ஸ் பண்ணும் மூட் மாறி உடல்ரீதியிலான விழைவுகளிலே ஏற்படும் மாற்றங்களைக் கண்டுகொள்ள ஆரம்பித்தபோது
    இது dangerous zone என்று அவதானித்து கொஞ்சம் கொஞ்சமாக தியானப் போக்கை முற்றிலும் கைவிட்டு உடல் பயிற்சிகளிலே ஈடுபட்டு body shapping என்று நடைமுறைக்கு வந்துவிட்டேன்..
    எல்லாமே போதை பற்றிய தணியாத ஆர்வம்தான்..இந்த போதையும் அப்படித்தான்..எந்த போதையும் அதற்குரிய ஆராய்ச்சிகளில் செல்லும்போது நம் காலத்தை லவுகீக வாழ்க்கையின் போக்கிலிருந்து திருப்பிவிடுகிறது..மீண்டும்..மீண்டு வர எடுக்கும் காலமும் சேர்த்து லவுகீக வாழ்வின் காலத்தில் கொஞ்சம் கழிந்து போவது மனதில் நெருடலாகவே இருந்தது..எல்லாம் அனுபவம்தான்..இது எந்த அளவு என்று எனக்குத் தெரியவில்லை..எப்போதுமே கலாட்டா பண்ணியே கமென்ட் அடித்துத்தான் எனக்குப் பழக்கம்..உண்மை அனுபவம் என்பதால் கொஞ்சம் சீரியசாகப் பகிர்ந்துகொள்கிறேன்..அவ்வளவுதான்..ஒருவேளை இங்கே அடிக்கப்பட்ட கமெண்டுகள் போலே என்கிற ரீதியிலான முயற்சியாகக் கூட இருக்கலாம்..ஏனெனில் ஒரு சூரிய கிரஹணம் வந்த போது 'ஆதித்ய ஹிருதயம்' மந்திரத்தை பலமுறை (நூற்றுக்கணக்கில்) உச்சாடனம் பண்ணி 'பகல்லே நட்சத்திரத்தோடு பேசிக்கிட்டு இருக்கான்' என்ற விஷயத்தை தொட்டு எனது செயல்பாடுகள் அமைந்திருந்தன..போதும்..இதோடு விட்டு விலகுகிறேன்..

    ReplyDelete