Sunday, February 22, 2009

வால்மார்ட் பற்றிய இரு வேறு பார்வைகள்


வால் மார்ட் என்பது ஆணி முதல் கப்பல்வரை விற்கும் ஒரு பலசரக்கு கடை. இந்த கடை அமெரிக்கா/கனடாவில் எல்லா ஊரிலும் மூலை முடுக்கு களிலும் இருக்கும். உலகில் அதிக பிசினஸ் செய்யும் கம்பெனிகளில் முதல் இடத்தில் இருப்பது இதுதான்.


கடந்த வாரம் ஒரு இந்திய சிவில் இஞ்ஜினியரை சந்தித்தேன். மிக பணக்காரர். கால்கரியில் 4 வீடுகள். டில்லியில் ஒரு பங்களா, ஹவாயில் ஒரு ரிசார்ட் என பணத்தில் திளைப்பவர். எல்லாம் அவரும் அவருடைய குடும்பத்தாரும் உழைத்த சொத்து.


அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் எல்லா பொருடகளையும் வால்மார்ட்டிலேயே வாங்குவதாக சொன்னார். அவர் தேடின பொருள் வால்மார்ட்டில் கிடைக்கவில்லையென்றால் மட்டும் வெளியில் வாங்குவதாக சொன்னார்.

வால்மார்ட் ஏழை மக்களின் கடையாயிற்றே உங்களை போன்ற பணக்காரர்கள் எப்படி... என இழுத்தேன்.. அவர் சொன்ன அவரின் கதை என்னை பிரமிக்க வைத்தது.


அவர் கனடாவிற்கு வந்த புதிதில் வேலையே கிடைக்கவில்லை. இந்தியாவில் அவர் பார்த்த கவர்மெண்ட் வேலையும் அனுபவமும் உதவவில்லை. கையில் கொண்டு வந்த ரூபாய் 20 லட்சம் வேகமாக தீர்ந்தது. அவர் அவரின் மனைவி மற்றும் பதின்ம வயதில் இரு மகன்களும் ஒரு மகளும் என்ன செய்வது என கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அப்போது அவர்களுக்கு கை கொடுத்ததது வால்மார்ட். ஐவரும் அங்கே வேலைக்கு சேர்ந்தார்கள். வாடகைக்கும் சாப்பாட்டிற்கும் பணம் கிடைத்தது. முதலில் தந்தை மேல் படிப்பு படித்து இஞ்ஜினியராக மறுபடியும் நல்ல வேலையில் சேர்ந்தார். மனைவி வால்மார்ட்டிலேயே பதவி உயர்வடைந்து அக்கௌண்டண்ட் ஆனார். பிறகு குழந்தைகள் படித்து முன்னுக்கு வந்துவிட்டார்கள். வந்தாரை வாழ வைத்த வால்மார்ட்டுக்கு நன்றி கடனுடன் இருக்கிறார்கள் இந்த மில்லியனர்கள்

இன்னொருவர், இவர் ஒரு அமெரிக்கர், வெள்ளை இனத்தவர் . அமெரிக்காவின் ஆடம்பர, கூச்சல் நிறைந்த வாழ்க்கையை வெறுத்து கனடவில் குடியேறிவர். மிக எளிமையாக வாழ்பவர். இவரின் அபார்ட்மெண்டில் சுத்தமாக ஒரு பர்னிச்சரும் இல்லை. ஸ்லீப்பிங் பாக் இல் தூங்குவார். இயற்கை சோப், மற்றும் வாசனை திரவியங்களை உபயோகிப்பார். உறைந்த இறைச்சியை சாப்பிட மாட்டார். ப்ரஷ் இறைச்சி அதுவும் இயற்கை தீவனங்கள் தின்று வளர்ந்த கால்நடை, இறைச்சியை உண்பார். இயற்கை உரங்களை கொண்டு விளந்த காயகறிகளைதான் உண்பார். கனடா மற்றும் அமெரிக்காவில் தயாரான உடைகளையும் காலணிகளையும் அணிவார். கோக் பெப்ஸி போன்ற பானங்களை அருந்த மாட்டார் இவ்வாறும் இன்னும் பல

இவரும் நானும் ஒரு முறை நகருக்கு சென்ற போது நான் வால்மார்ட்டில் சில பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. இவர் வால்மார்ட்டின் உள்ளே வர மறுத்து விட்டார். பிறகு அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் வால்மார்ட்டின் மேலுள்ள அவரின் ஆதங்கங்களை வெளியிட்டார்..


வால்மார்ட் அநியாய பிஸினஸ் செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் பல குழந்தை தொழிலாளர்களினால் குறைந்த விலையில் தயாரிக்க்பட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கிறது என்பார். வால்மார்ட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை அடிமையாக நடத்துவார்கள் என்றார். உதாரணத்திற்கு. திங்களன்று ஒருவரை மானேஜர் ஒரு தொழிலாளியை அழைத்து இன்று 10 மணிநேரம் வேலை செய் என்பார். அந்த தொழிலாளியும் ஓவர் டைம் கிடைக்கிறது என்று சந்தோஷமாக வேலை செய்வார். ஆனால் வெள்ளி கிழமை அந்த தொழிலாளியை அழைத்து இன்று 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்பார். அந்த வாரம் அவர் 40 மணிநேரம் வேலை செய்த மாதிரி ஆகிவிடும் ஆகையால் ஓவர் டைம் வழங்க தேவையில்லை. மேலும் தொழிலாளிகளின் கூலியை எப்போதும் ஏற்றுவது இல்லை. சம்பள உயர்வு கேட்டால் வேலை காலியாகிவிடும் இன்னும் இவ்வாறு பல குற்றசாட்டுகளை அடுக்கினார்.


அவர் அடுக்கியதில் அர்த்த முள்ள குற்றசாட்டு இதுதான்: வால்மார்ட் அசுர வளர்ச்சிக்கு அடைவதற்கு முன் ஆங்காங்கே சிறு சிறு கடைகள் இருந்தன. சில கடைகளில் சில பிரத்யேக பொருடகள் கிடைக்கும். அங்கே வாடிக்கையாளராகி அந்த கடைகளை ஊக்குவிப்பதில் அலாதி இன்பம். ஆனால் வால்மார்ட் வந்தவுடன் அந்த சின்ன கடைகள் காணாமல் போய்விட்டன. சின்ன சின்ன முதலாளிகள் இல்லாமல் போய்விட்டனர். இப்படி சின்ன மீன்களை விழுங்கிய பெரும் திமிங்கிலம் தான் இந்த வால்மார்ட் இங்கே பிசினஸ் செய்வது நல்லதில்லை என்பார். மேலும் இவர் சுவிட்சர்லாந்தை அதிகமாக வெறுப்பவர். சுவிட்சர்லாண்ட்டில் மூன்றாம் உலக ஊழல்வாதிகள் ஏழை மக்களை ஏமாற்றி அங்கே பணத்தை போடுகிறார்கள். அந்த பாவபட்ட பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழ்கிறது இந்த நாடு. இதெல்லாம் ஒரு நாடு. இந்த நாட்டின் பொருளை நான் ஏன் வாங்க வேண்டுமென்றார். இந்தியாவில் தயாராக்கும் டைடன் வாட்ச்களை வாங்க தயாராய் இருக்கிறார். அடுத்த முறை இந்தியாவிற்கு போகும் போது ஒரு டைடன் வாட்ச் ஒன்றை வாங்கி இவருக்கு தரவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இதில்எனக்கு என்ன புரிந்தது என்றால் .ஏழை மக்களை அடித்து ஏழைகளை வாழவைத்து வால்மார்ட் ஓனர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்பது தான்



























Friday, February 20, 2009

சூரிய நாய்கள்

கடந்த ஆறுமாதங்களாக கனடாவின் வடக்கே உள்ள எண்ணை எடுக்கும் மணற்குவாரியில் வேலை.


கிறிஸ்துமஸ் நியூ இயர் லீவில் பெரும்பாலோர் ஊருக்கு போய்விட நான் அங்கே வேலைப் பார்த்து கொண்டிருந்தேன்.

அன்றைக்கு கடும் குளிர். லாட்ஜிலிருந்து கார்பார்கிங்க்கு நடந்து வருவதற்குள் கண்ணில் இருக்கும் நீர் கூட உறைந்து கண்கள் வலித்தன.

அதிகாலை சுமார் 6.30 இருக்கும் கும்மிருட்டு இங்கே சூரிய உதயமே காலை 9 மணிக்கு பிறகுதான்.

காரை ஸ்டார்ட் செய்து காரின் வெப்பமானியை நோக்கியதில் வெப்பம் -45 என காட்டியது. என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகு குறைந்த வெப்பம் இதுதான்.


கண்ட்ரோல் ரூமிற்கு முன்னால் காரை பார்க் செய்து உள்ளே வந்து சூடான காபி அருந்தி கொண்டே மீட்டிங்க் அட்டெண்ட் செய்தேன். அங்கே எந்தெந்த பைப்புகள் உறைந்து உடைந்துள்ளன என விவரித்து கொண்ட்டிருந்தார்கள். எரிகோபுரத்தின் (Flare) மேல் சுமார் 3 டன் ஐஸ் உறைந்திருக்கிறது. அது எந்த நேரத்தில் உடையும் உடைந்தால் எங்கே விழும் விழுந்தால் என்னென்ன இயந்திரங்கள் பழுதாகும் என விவாத்திதோம்.


அதற்குள் மணி காலை பத்தாகியிருந்தது. அப்போது பப்ளிக் அனௌன்ஸ்மெண்ட் சிஸ்டத்தில் "வெளியே குளிர் -52 டிகிரி சி அவசியம் ஏற்பட்டால் ஒழிய யாரும் வெளியே போகவேண்டாம். இது கட்டளை " என அறிவித்தார்கள்


கட்டளை என்றாலே அதை மீற வேண்டும் போல் தோன்றும் எனக்கு புகைபிடிப்பாளர்கள் ரகசியமாக வெளியே போனார்கள். நானும் அவர்களுடன் போனேன்.



அங்கே நான் கண்ட காட்சி காணக்கிடைக்காத காட்சி.



மூன்று சூரியன்களை கிழக்கே அடிவானத்தில் கண்டேன்



ஆ என் வாய்பிளந்ததில் என் சிறு குடல் வரை உறைந்து விட்டது :)



புகை பிடிக்க வந்த நண்பர்கள் " அதுவா சிவா, இதை சூரியநாய் என்பார்கள்" என் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு புகை பிடிக்க போய்விட்டார்கள்.


அந்த காட்சியை போட்டோ எடுக்கலாம் என்றால் கையில் காமிரா இல்லை. செல் போன் காமிராவிலும் சரியாக பதிவாக வில்லை.


விக்கிபீடியாவில் கிடைத்த புகைபடம் கீழே உள்ளது.



மிஷ்டி தோய்யும் நீர் மோரும்



கடந்த ஆறுமாதங்களாக படு பிஸி. எண்ணையை எடுத்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலைப்பார்த்தோம் கனடாவின் வடமத்திய மேற்கே எண்ணை மணலில் ஆலைகட்டி எண்ணை எடுக்க செக்கிழுத்துக் கொண்டிருந்தோம்.

ஆலைக்கு ஓரத்தில் ஒரு ஓடுபாதை கட்டி பிரத்யேக விமானங்களில் தொழிலாளர்களை அள்ளிக் கொண்டு போய் ராட்சச லாட்ஜுகளை அங்கேயே கட்டி தொழிலாளர்களை தங்க வைத்து வேலை வாங்கி கொண்டிருந்தார்கள்.

வழக்கம்போல் கம்யூட்டர்/கண்ட்ரோல் ஸிஸ்டம் வேலைகளை செய்ய இந்திய இளைஞர்கள் கணிசமான அளவில் வந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் போயிருந்தேன். காடு இரண்டு வாரம் வீடு ஒரு வாரமென கடந்த ஆறுமாதகளாக வாழ்க்கை ஓடுகிறது.


கானகத்தில் கட்டிய லாட்ஜில் உள்ள மெஸ்ஸில் தினம் தினம் வேளைக்கு வேளை மாமிசம்தான். மாமிச பட்சிணி எனக்கே சலித்துவிட்டது என்றால் பாருங்கள். எத்தனை ஆயிரம் மாடுகள், பன்றிகள், கோழிகள், மீன்கள் உயிர்தியாகம் செய்தனவோ.

நம்மாட்களுக்கு மாமிசம் என்றாலே ஆகாது. இந்தியாவிலிருந்து வந்தவர்களெல்லாம் மிக வேகமாக கனடாவின் ரிசஷென் போல் எடை இழந்து கொண்ட்டிருந்தார்கள்.

ஒருநாள் என்னிடம் "சார், சப்பாத்தி, தால், தயிர், சோறு கிடைத்தால் போதும் சார்" என்றார்கள். நானும் மெஸ் மானேஜரிடம் பேசினேன். அவர் என்னை தர தரவென்று இழுத்துக் கொண்டு வித வித மான் யோகர்ட் அதாவது வெள்ளைகார மிஷ்டிதோய்யைக் காட்டினார். "சாமி இதெல்லாம் இருக்கம்ட்டும்யா..... நம்மாட்களுக்கு இதெல்லாம் பிடிக்காது . இந்த மாதிரி வெண்ணிலா, ஸ்ட்டிராபெர்ரி, ப்ளூ பெர்ரி பிளேவர்களை விட்டு சர்க்கரை போடாதத ப்ளேன் தயிரை காட்டுமய்யா எங்காட்கள் மிக சந்தோஷமாகிவிடுவார்கள்" என்றேன்.


அடுத்த நாள் முதல் நம்மாட்களின் முகத்தில் சந்தோஷ களை தாண்டவமாடியது. கால்கரியிலிருந்து ப்ரியா ஊறுகாய் பாட்டில்களை இறக்குமதி செய்யபட்டு தயிர்சாதத்தை கட்டு கட்டு என ரவுண்டடித்துக் கட்டினார்கள். முதலில் முகம் சுழித்த வெள்ளைக் கார துரைகள் பிறகு அதைப்பார்த்து பழகி கொண்டார்கள்


முந்தின இரவு சாப்பிட்ட ஸ்டேக் காலையில் சாப்பிட்ட சாசேஜ் மதியம் சாப்பிட மூஸ் ஸ்டூ இவைகள் வூடு கட்டி தாக்கியதி வயிற்றில் வெப்பம் அதிகரித்தது . வெளியே என்னவோ வெட்பம் -45 டிகிரி சி தான்.


என் வயிற்று வெப்பத்தை தணிக்க சமையலறைக்கு சென்றேன். அங்கே இரு வெள்ளைகார பெண்மணிகள் தங்கள் எடையை குறைக்கும் நோக்கத்தில் மிக சுவையான ராஸ்பெர்ரி யோகர்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சர்க்கரை போடாத, ப்ளேவர் இல்லாத யோகர்ட் கிடைக்குமா என கேட்டன். அவர்களும் ஒரு சின்ன கப் ப்ளேன் யோகர்டை கொடுத்தார்கள்.

ஒரு பெரிய கிளாஸை எடுத்து அந்த யோகர்டை அதில் காலி செய்தேன். அந்த பெண்மணிகள் சங்கடத்துடன் என்னைப் பார்த்தார்கள். பிறகு வெண்டிங் மெசினில் ஒரு அக்வா ஃபினா பாட்டிலை வாங்கி அந்த தண்ணீரை அதில் ஊற்றினேன். ஒரு பெண்மணி "ஏய்... சிவா என்ன செய்கிறாய்?" என அந்த ப்ளாண்ட்களுக்கே உரிய முகபாவனைகளை காட்டினாள். நான் அதில் சிறுது உப்பை போட்டதும் "ஏய்... ஏய்.. நீ வேடிக்கை தானே காட்டுகிறாய்" என்றாள். நான் புன்னகைத்து கொண்டே சிறிது மிளகு பவுடரை போட்டதும் அந்த பெண் வீல் என வீரிட்டாள்


கண்ட்ரோல் ரூமில் இருந்த எல்லோரும் என்ன சத்தம் என பார்க்க வந்து விட்டார்கள்.

அந்த பெண் "என் வாழ்க்கையில் பார்க்காத நிகழ்ச்சி இது.. இவன் தயிரில் உப்பும் மிளகும் போட்டு தண்ணீர் ஊற்றி சாப்பிடுகிறான்" என் கண்களை விரித்து தோள்களை குலுக்கி சொல்லிகொண்டிருந்தள்.


இதை கேட்ட என் வட இந்திய நண்பர்கள் "அரே யார், ச்சாஸ் (chaas) யார் மேரகோ ஏக் கிளாஸ் தேதோ" என உற்சாகமாகி விட்டார்கள்.


இந்த மாதிரி சமயத்தில் தான் திரு. சொக்கன் எழுதிய இந்தப் பதிவை பார்க்க நேரிட்டது.

என் வயிற்று வெப்பம் தணிந்ததோ இல்லையோ நீர்மோர் இந்த பனிக்காட்டில் கொடிகட்டி பறக்கிறது.






பி.கு. பனிகாட்டில் என் வெள்ளைகார நண்பர்கள் பனிஸ்கூட்டரில்(Snow mobile) போய் மேலே படத்தில் உள்ளதை போன்ற ஒரு மூஸை வேட்டையாடி அந்த இறைச்சியை சமைத்தார்கள்.