Thursday, March 29, 2007

இளசுகளை ஊக்குவித்த பெருசுகள்

நான் வாழும் Alberta மாநிலத்தின் ப்ரொபெஷனல் அசோஷியனின் பெயர் The Association of Professional Engineers, Geologists and Geophysicists of Alberta (APEGGA). இங்கே சாதரணமாக பி.ஈ அல்லது பி.டெக் படித்துவிட்டால் தங்களை எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ள முடியாது. APEGGA வில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு ப்ரஸ்ஸர் நான்கு வருடங்கள் EIT (Engineer-in-Traning) ஆக இருக்க வேண்டும் . பின்னர் Professional Ethics என்ற நன்னடத்தை பரீட்சை எழுதி பாஸ் செய்யவேண்டும், தாங்கள் வேலைப்பார்த்த கம்பெனிகளிடமிருந்து நல்ல ரெபரன்ஸ் இருக்க வேண்டும். இத்தனையும் இருந்தால் தான் Professional Engineer என்ற பட்டத்தை தருவார்கள்.

அந்தப் பட்டம் கிடைத்த பிறகு பெயருக்கு பின்னால் P.Eng. போட்டுக் கொள்ளலாம், எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ளலாம். அடியேனுக்கு அந்த பட்டம் கிடைத்து விட்டது.

APEGGA வும் University of Calgary யும் சேர்ந்து நடத்திய விழாவில் பங்கு கொள்ள நேற்றைக்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் என்னை போன்ற பெருசுகளிடம் பேசி எஞ்ஜினியர் வேலை எத்தகைய்து என அறிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம்.

சுமார் 50 பெருசுகளும் 300 சிறிசுகளும் 50 ஆசியர்களும் கலந்து கொண்ட நிகழ்சி. இதுவே மாணவர்களின் ஆண்டு விழாவாகவும் கொண்டாடப் பட்டது.

வெளிநாட்டு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்வது முதல் முறை. மிக வித்தியாசமாக இருந்தது.

ஆங்கிலத்தாய்/ப்ரெஞ்ச் தாய் வாழ்த்து /இறைவணக்கம் இல்லை. விழாவின் தலைவர் வருகைக்கு கட் அவுட்டுகள், தலைவர் இதோ வந்துவிட்டார், வந்து விடுவார், வந்து கொண்டே இருக்கிறார் என்ற அறிவிப்புகள் இல்லை. விழாவின் மையப் பேச்சாளார் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி. சுமார் 32 வயது நிறம்பியவர். சர்வதேச மோட்டார் சைக்கிள் ரேஸ் இஞ்ஜினியர். உலக மோட்டார் சைக்கிள் ரேஸ் வட்டாரத்தில் புகழ் பெற்றவர். தான் கலந்து கொண்ட பந்தயங்கள், சென்ற நாடுகள், புகழ் பெற்ற வீரர்கள், அவரை ஸ்பான்ஸர் செய்த கம்பெனிகள் என பவர் பாய்ண்டில் படம் காட்டி பேசி கொண்டே போனார். எனக்கு சிறிது அலுப்புத் தட்டியது. என்ன ஓவர் அலம்பல் ஆக இருக்கே என. பிறகு அவர் மோட்டர் சைக்கிள் ரேஸ் எஞ்ஜினியரிங்கள் உலகத்தில் முதுகலை பட்டம் அளிக்கும் கல்லூரி ஸ்பெயினில் இருப்பதாக குறிப்பிட்டார். சிறிது சுவாரசியம் வந்தது. இதற்கெல்லாம் பட்டம் அதுவும் முதுகலை என்பது ஆச்சரியமல்லவா. அந்தக் கல்லூரியில் அவருக்கு இடமும் கிடைத்துள்ளது என்பதையும் தெரிவித்தார். முத்தாய்ப்பாக "உங்கள் ஆசை எதுவோ அதில் உங்களை தொழிலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் ஹாபி எதுவோ அதுவே உங்கள் காரியர் ஆக்கி கொள்ளுங்கள். அப்போதுதான் தினம் தினம் காலையில் உற்சாகமாக அலுவலகத்திற்கு செல்லுவீர்கள். உங்கள் வேலை உங்களின் மன உற்சாகத்தையும் தருவதால் நிச்சய வெற்றி உங்களுகுண்டு. நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதுவாக ஆகுங்கள்" என முடித்தார். நல்ல பேச்சு.

பிறகு மாணவர்கள் தாங்கள் ஒருவருடத்தில் செய்த அசட்டுதனங்களை வீடியோ போட்டுக் காட்டினார்கள்.

வித்தியாசமாக மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

நான் அமர்ந்திருந்த டேபிளில் ஒரு சீன இஞ்ஜினியர், இரண்டு வெள்ளைக்கார ஆசிரியர்கள், ஒரு சிங்கள மாணவன், ஒரு பிலிப்பினோ மாணவி மற்றும் ஒரு பங்களாதேச மாணவி அமர்ந்திருந்தனர். சர்வதேச அரங்கில் வேலை செய்வது எப்படி இருக்கும் என என் அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். அருகிலிருந்து டேபிளிலிருந்து ஒரு வெள்ளைக்கார இளஞர் கலந்து கொண்டார். "இஞ்ஜினியர் ஆனால் அதிக பணம் சம்பாதிக்க முடியுமா?" எனக் கேட்டார்.

80களில் இந்தியாவில் ப்கழ் பெற்று இருந்த வசனத்தை சொன்னேன். அது "40 வயதிற்குள் 40 லட்சம் சம்பாதிக்க வேண்டும்" என்பதே. அவர் "சம்பாதித்தீர்களா" என கேட்டார். நானும் "ஆம் சம்பாதித்தேன் ஆனால் நான் எதிர்பார்த்ததை விட 21/2 மடங்கு அதிகம் சம்பாதித்தேன்" என்றேன். அவன் கண்களில் எதிர்காலத்தைப் பற்றிய கனவு விரிந்தது.

அப்போது அந்த பங்காளாதேசத்துபெண் " இப்போது பொருளாதாரம் நன்றாய் இருக்கிறது. அதனால் எல்லாருக்கும் வேலைக் கிடைக்கிறது. ரிசஷன் காலங்களில் எஞ்ஜினியர்களுக்கு வேலை போய்விடுமே" என்றார்.

"கனேடிய P.Eng. களுக்கு சர்வதேச அரங்கில் நல்ல மதிப்பு இருப்பதால் உலகில் எங்கே பொருளாதாரம் நன்றாக இருக்கிறதோ அங்கே வேலைக்கு போங்கள். கடந்த 23 வருடங்களாக நான் வேலையை இழக்கவில்லை." என்றேன். அந்த பெண்ணின் கண்களிலும் ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது.

பெருசுகளாகிய நாங்கள் சிறுசுகளுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஏற்றிவிட்டு வெளி வரும் நேரத்தில் சிறுசுகள் ஒளிமயமான எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

வாழ்க சிறுசுகள்

Thursday, March 15, 2007

சில செய்திகள்

1. பாகிஸ்தானிய தீவிரவாதி "நான் தான் எல்லாம் செய்தேன்" என ஒப்புதல் வாக்குமூலம். சவூதியை சேர்ந்த ஒசாமா பின் லாடன் பணம் தந்தார் என்றான் (புஷ் பாகிஸ்தான் தீவிரவாத போரில் ஒரு நண்பன் என பெருமிதம். தீவிரவாதத்தை ஒழிப்பதில் சவூதியின் பங்கு பெரிது என பாராட்டு - இது வருங்கால செய்தி)

2. கனடாவின் மக்கள் தொகை G-8 நாடுகளில் அதிக வளர்ச்சி. இன்னும் மக்கள் தொகை அதிகமாக வேண்டும் என அரசியல்வாதிகள் மக்களை கேட்டுக் கொண்டனர். மக்கள் தொகை 3.2 கோடியாக உயர்ந்தது (தமிழக மக்கள் தொகை மட்டும் 6.2 கோடி. கனடாவின் பரப்பளவு இந்தியாவின் பரப்பளவை விட சுமார் 7 மடங்கு அதிகம்)

3. தொப்பை உள்ள ஆண்களுக்கு மனநோய் வரும் வாய்ப்பு கம்மியென்று ஆய்வு முடிவுகள தெரிவிக்கின்றன- சி என் என் செய்தி (தொப்பை வளர பீர் குடிப்போம் மன நோயை தவிர்ப்போம்)

4. கருக்கலைப்பு தவறு, கர்ப்பதடை தவறு, பாதிரியார்கள் பிரம்மாசாரியத்தை கடைப்பிடிக்வேண்டும் என போப்பாண்டவர் மீண்டும் வலியுறுத்தல் (மக்கள் தொகையை கட்டுபடுத்த இளம் வயது கத்தோலிக்கர்கள் பாதிரியார் ஆவதை தவிர வேறு வழியில்லை என புலமபல்)

5. ஆன்மிக சிந்தனைக்கு பரிசு $1.5 மில்லியன்கள். கனடாவை சேர்ந்த ஆன்மிக தத்துவஞானி சார்லஸ் டெயல்ர்க்க்கு கிடைத்தது ( ஆசையை அழியுங்கள் என சொன்னவருக்கு கிடைத்து பரிசு நல்ல காரியங்களுக்கு பயன்படும். ஆனால் 1.5 மில்லியன் கிடைக்கும் என ஆன்மிகத்தில் இறங்கினால் விபரீதம் ஏற்படும்.)

6. ஈரான் மேல் பொருளாதார தடைவிதிக்க 6 நாடுகள் சம்மதம் ( ஆனால் ஈரான் அதிபர் குரங்கு மார்க் அணுகுண்டை வெடித்தே தீருவேன் என சூளுரை)

7. பழைய பேப்பர், பாட்டில்கள், கேன்களை ரீசைக்கிள் செய்ய மாதம் $21 மக்கள் கொடுக்கவேண்டும் என கால்கரி முனிஸிபாலிடி முடிவு.( அடபாவிங்களா சென்னையில் இந்த ஐயிட்டங்களை மாதக் கடைசியில் விற்று பீர்-பிரியாணி சாப்பிடுவோம்டா என டெபுடேஷனில் கால்கரிக்கு வந்த சாப்ட்வேர் இளைஞர்கள் புலம்பல்)

8. பாரத பிரதமர் வீட்டின் மேல் பறக்கும் தட்டுகள் காணப்பட்டன (நாம் நம் கணவனை நோக்கி வீசிய தட்டுகள் அவ்வளவுதூரம் எப்படி போயின என மனைவியர் கலக்கம்)

9. The Hindu வின் கருத்துக்கணிப்பிற்கு மாறாக சமீப தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியதற்கு காரணம் காங்கிரஸ் மேலிருந்த இந்துக்களின் கோபம் என கண்டுபிடிப்பு ( இனி சோனியா காந்தி ரூ 5,000 தந்து இந்துவாக மாறுவார் என நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கருணாநிதி சாய் பாபவிற்கும், அமிர்தானந்தமயிக்கும் எவ்வள்வு தந்தார் என்பதை தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் அன்னை சோனியாவிற்கு அறிக்கைகள் சமர்பித்தனர். தென்னாப்ரிககாவிலிருந்து அமேசான் நதி நீரை கொண்டுவர சாய்பாபா உதவினால சோனியா மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என அந்த அறிக்கைகள் கூறின)

Friday, March 09, 2007

சாப்ட்வேர் எஞ்ஜினியர்ஸ் நோ டென்ஷன் ப்ளீஸ்

பொன்ஸின் இந்த பதிவு இதை எழுத தூண்டியது. அலுவலகத்தில் அதிக நேரம் தங்கி வேலைப்பார்ப்பதை பற்றி நல்ல கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த மாதிரி அதிகநேரம் அதிகம் தங்கி இருக்கும் மனப்பான்மை எங்கிருந்து தோன்றியது எனப் பார்த்தால் பள்ளியிலேயே ஆரம்பித்து விடுகிறது. முதல் ராங்க் வாங்கும் மாணவனும் 6 மணிநேரம் பள்ளி 6 மணிநேரம் டியூசன் என போவான். ஐஐடி கோச்சிங் அந்த கோச்சிங் என மேலும் மேலும் தன்னை வருத்திக்கொள்வான்.

கல்லூரி போனதும் அங்கேயும் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸ், ஜி ஆர் ஈ, டோபல், சாப்ட்வேர் கம்பெனிகளின் எண்ட்ரன்ஸ் டெஸ்ட் பிரிபரஷன், அடிஷனல் சாப்ட் வேர் பயிற்சி என ஓயாத ஓட்டம்.

வேலைக்கு சேர்ந்ததும் டிரெய்னிங் அதில் முதல் ராங்க் வாங்க ஓட்டம். அதன் பிறகு வேலைக்கு வந்ததும் ஒரு வேலையை தந்தால் அந்த டெக்னாலஜி தெரியாவிட்டால் தனக்கு தெரியாது என சொல்பவர்கள் எத்தனை பேர்?

"சார்... சார்... எனக்கு எல்லாம் தெரியும் சார்" என மார்தட்டுபவர்கள்தான் அத்தனைபேரும்.

வேலை வந்தபிறகு அந்த டெக்னாலஜியைக் கற்றுக் கொண்டு பிறகு வேலை செய்யவேண்டும். ப்ராஜெக்ட் மானேஜர் வேறு அப்பர் மானெஜ்மெண்டிடம் ஒரு ambitious டார்கெட்டை கொடுத்திருப்பார். இதனால் தான் மக்கள் லேட்டாக தங்கி வேலை செய்ய வேண்டியுள்ளது.

இங்கே ஒரு வெள்ளைக்காரனை ஒரு புது டெக்னாலஜியில் வேலை செய்ய சொன்னால் அவனுக்கு முதலில் அதில் பயிற்சி அளிக்கவேண்டும் அதன் பிறகுதான் வேலையை ஆரம்பிப்பான். அவன் சொல்லும் கால அளவு இந்திய ப்ராஜெக்ட் மானேஜர்கள் சொல்லும் கால அளவைவிட 4 மடங்கு அதிகம் இருக்கும். ஆனால் வேலைத்தரமாக இருக்கும் முழுமையாகவும் இருக்கும்.

இந்தியகம்பெனிகள் ஆழம் பார்க்கால் காலை விட்டுவிட்டு பிறகு இரவுபகல் பாடுபட்டு வேலைப்பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

"இந்த வயசில் வேலை செய்யாவிட்டால் எந்த வயசில் வேலை செய்ய்முடியும் அட்ஸஸ்ட் பண்ணிக்கிருங்க சார்" என்ற மெண்டலிட்டிதான் நம் ஆட்களின் எல்லா கஷ்டங்களுக்கும் காரணம்

Thursday, March 08, 2007

பன்னாட்டு கம்பெனிகளில் பார்ட்டி கலாசாரம்

சமீபத்தில் சாப்ட்வேர் இஞ்ஜினியர்கள் குடித்து போதை மாத்திரை சாப்பிட்டு விட்டு செக்ஸ் பார்ட்டிகளில் கலந்து கொண்டு கைதானர்கள் என்ற செய்தியை வைத்து இரண்டு பதிவுகள் வந்துவிட்டன.

கடந்த 23 வருடங்களில் 18 வருடங்கள் (5 வருடங்கள் அரபு கம்பெனி) 2 மேலை நாட்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவன் என்ற வகையில் என் அனுபவங்கள் :

1980களில் இந்தியாவில் பன்னாட்டு கம்பெனிகள் 5 நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டியை வைப்பார்கள். இந்த மாதிரி பார்ட்டிகள் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். இது வழக்கமாக புத்தாண்டு/கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியாக இருக்கும். சில பார்ட்டி கேம்கள், பீர் முதல் விஸ்கி வரை இருக்கும். இங்கே குடித்துவிட்டு ஆட்டம் போடுபவர் மிக மிக கம்மி. அவ்வாறு ஒருவர் செய்தார் என்றால் அவரின் வேலை ஆட்டம் காணும் அல்லது அவரது வேலை ஆட்டம் கண்டிருக்கும். பெண்கள் கம்மி இந்த காலகட்டங்களில் அவர்கள் குடித்து பார்த்ததில்லை.

கஸ்டமர் எண்டெர்டெய்ண்மெண்ட் பார்ட்டிகள் அதிகம் இருந்தன. இதில் குடித்து ஆட்டம் போட்டவர்கள் கஸ்டமர்களே. கவனிக்கவும் கஸ்டமர்கள் அனைவரும் பாரத நாட்டின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள். சில ஜட்ஜ்களும் உயர் போலீஸ் ஆபிஸர்களும் மிகக் கீழ்தரமாக நடந்து பார்த்திருக்கிறேன். ஜட்ஜூகள் போலீஸ் அதிகாரிகள் பப்ளிக் இடங்களுக்கு வரமாட்டார்கள். ஆனால் போட்கிளப், ஜிம்கானா கிளப் போன்ற கிளப்களுக்கு வருவார்கள்

1990 களில் பார்டிகளின் அளவு எகிறியது. ஒவ்வொரு புராஜெக்ட் வெற்றிக்கும் பார்ட்டிகள் நடந்தன. பெண்கள் அதிகமாக வேலை செய்ய வந்தனர். அவர்களில் மிக சிலர் மறைவாக குடித்தனர். ஆபிஸில் காதலும் பாலுறவு தொடர்பும் வதந்திகளகாவே இருந்தது. இந்த காலகட்டத்தில் பன்னாட்டு கம்பெனிகள் லோக்கல் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டனர். தீபாவளி மற்றும் ஆயுத பூஜைகள் விமரிசையாக கொண்டாடப்பட்டன.

2000 களில் சரிபாதி பெண்கள் இருந்தனர். அலுவலகம் பாலுறவு தொந்தரவுகளை மன்னிக்கவில்லை. சம்பந்த பட்ட ஆணோ பெண்ணோ வேலையை இழந்தார்கள். ஆனால் காதல் ஆங்கீகரிக்கபட்டது.

நான் ஒரு பெண்ணை நேர்முக தேர்வு செய்து அவளுக்கு வேலை தந்தவுடன் அவள் என்னிடம் வந்து என்னுடைய காதலனும் இண்ஸ்ட்ருமெண்ட் இஞ்ஜினியர் அவனை வேலைக்கு எடுப்பீர்களா என கேட்டாள். உன்னுடைய காதலன் தகுதியானவன் என்றால் வேலைதருவதில் சிரமமில்லை என்றேன். பின்னர் அவளின் காதலனும் என்னுடைய அலுவலகத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர்கள் திருமணம் நடந்தது. பெண் நெல்லூர் ஆண் லக்னோ.

கள்ளக் காதல்கள் வதந்திகளாகவே இருந்தது.

இங்கே கால்கரியில் மாதம் ஒரு முறை பீர் பார்ட்டி அலுவலகத்திலேயே உண்டு. ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டு ஜாலியாக பேசிவிட்டு குடித்துவிட்டு செல்வர். 2 கேன்களுக்கு மேல் குடித்துவிட்டால் வீட்டிற்கு போக வர டாக்ஸி டோக்கனும் கொடுத்துவிடுவார்கள் இங்கே.

இந்திய கம்பெனிகள் அதாவது இந்திய அரசாங்க கம்பெனிகள் இந்த மாதிரி பார்ட்டிகளை தருவதில்லை. ஆனால் மக்கள் பாருக்கு செல்லாமலா இருக்கிறார்கள். மது அருந்துவது ஒரு பொழுது போக்காக டென்ஷனை குறைக்கும் வழியாகிவிட்டது. அது கம்பெனியே வழங்கி மக்களை குஷி படுத்துகிறது. மதுவை குடித்தே ஆக வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை. அப்படியே மது குடிப்பவர்கள் 20 முதல் 25 % தான் மீதமுள்ளவர்கள் சைட் டிஷ்ஷை சாப்பிடுவதற்கும் பாஸை ஐஸ் வைப்பதற்கும் வருபவர்கள்

போதை மருந்து உட்கொள்வது மற்றும் கூட்டு பாலுறவு போன்றவை வெளிநாட்டிலும் நார்மலான வாழ்க்கை வாழ்பவர்கள் செய்யவில்லை.

ஆயிரகணக்கான பேர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு சிறு சதவிகிதம் இந்த மாதிரி கெட்ட கொண்டாட்டங்கள் செய்வது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல.

Tuesday, March 06, 2007

ரிசர்வேஷனின் பரிணாம வளர்ச்சி

மத்திய 80களில் ரிசர்வேஷன் என்பது அநியாயமாக இருந்தது. ஒவ்வொரு ஊருக்கு ஒரு அளவில் ரிசர்வேஷன் . சின்ன ஊர்களுக்கு மிக சிறிய கோட்டா. பணக்காரங்களுக்கு ஈசியாக ரிசர்வேஷன். என்ன அநியாயம்ன்னா பணக்காரனாய் இருந்தால் ராஜ மரியாதையாக ரிசர்வேஷன். ரிசர்வேஷனின் பலனை அனுபவிக்க மக்கள் பட்ட பாடு இருக்கே அப்பா பயங்கரம். அந்த இடமே ஒரே புழுக்கம், வேர்வை நாற்றம் எனக் கூட்டம் அலை போதும்.




அட ......நான் ரயில்வே ரிசர்வேஷனைப் பற்றி பேசறேன்.


அந்த காலத்திலே பாண்டியனுக்கு ஒரு லைன், வைகைக்கு ஒரு லைன், ப்ர்ஸ்ட் கிளாஸுக்கு ஒரு லைன் படா பேஜாராய் இருக்கும். இந்த ரிசர்வேஷன் பண்ற நேரத்துக்குள்ளே கே.பி. டிராவல்ஸ் பஸ்ஸை பிடிச்சி ஊருக்கே போயிடலாம்.

என் நண்பர் ஒருவர் சி எம் சி என்ற கவர்மெண்ட் கம்பெனியிலே வேலை பார்த்துகிட்டு இருந்தார் அப்போ. அவர் வந்து கதை கதை யாய் சொல்லுவார். கம்யூட்டர் ரிசர்வேஷன் சாப்ட்வேர் பற்றி. முழு சாப்ட்வேரும் போர்ட்ரானில் எழுதினார்கள் முதலில் என்பார். சென்னை, பம்பாய், டில்லி மற்றும் கல்கத்தா நகரங்களில் உள்ள கம்யூட்டர்களை இணைக்க போவதாய் சொல்லுவார். நாங்களும் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்ப்போம்

அங்கிருந்து ஆரம்பித்தது நிற்கவே இல்லை. இப்போது ரயில்வே டிக்கட்டை வீட்டிலிருந்த படியே புக் செய்யலாம். சில சமயம் நான் கனடாவிலிருந்து என் தாயாராக்கு ரயில்வே ரிசர்வேஷன் செய்திருக்கிறேன்.

இதை ஆரம்பிக்கும் போது எத்தனை தடைகள். செங்கொடி தொண்டர்கள் முதலில் கம்யூட்டர் வந்தால் ஆள் குறைப்பு ஏற்படும் என்று கொடி தூக்கினார்கள்.

நடந்தது என்ன?

எந்த கவுண்டரிலும் எந்த டிரயினுக்கும் எந்த கிளாஸுக்கும் ரிசர்வேஷன் செய்யலாம் என சமத்துவம் வந்தது.

ஏஜெண்டுகள், லஞ்சம் பெருமளவு குறைந்தது.

எந்த ரயிலில் எந்த வகுப்பில் எந்த தேதியில் எவ்வளவு இருக்கைகள்/படுக்கைகள் உள்ளன என்பது மிக துல்லியமாக மக்கள் அறிய முடிகிறது.

இப்போது எந்த ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலையும் தருகிறார்கள்.

எஸ் எம் எஸில் கூட ரயில்வே பற்றி அறிய முடிகிறது...

எத்தனை எத்தனை மக்கள் பயன் பெற்றார்கள்.

ஆக மொத்தம் ரயில்வே ரிசர்வேஷன் செய்வது ஒரு இன்ப அனுபவமாகவே உள்ளது.

சாபஷ்டா... சாப்ட்வேர் இஞ்சினியா..... உன் பணி தொடரட்டும்