குடும்பத்துடன் டோராண்டோ மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு கோடை விடுமுறைக்கு சென்ற பயணக் கட்டுரை. (நட்சத்திர வாரத்தில் சொந்த கதைக்களை சொல்லி பந்தா அடிக்காவிட்டால் பிறகு வாய்ப்பு ஏது)
கால்கரியிலிருந்து டோரோண்டாவிற்கு விமான பயணம் சுமார் 4 மணி நேரம் இது அபுதாபி/சவூதி - சென்னையை விட அதிக நேரம்.
நானும் அமெரிக்க கஞ்ச பிஸினாரி NRI போல் மிக மலிவான விலையில் விமான டிக்கட் வாங்கினேன். விளைவு விமானம் காலை 6 மணிக்கு. இந்த தீவிரவாத மூதேவிங்க ஏதோ சொல்லபோயி எல்லாரும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்னமே விமான நிலையத்திற்கு வர சொல்ல 5 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டுமென்றால் வீட்டிலிருந்து 4.30 க்கு கிளம்ப வேண்டும். 4.30 மணிக்கு கிளம்பவேண்டுமென்றால் 3.30 மணிக்கு எந்திரிக்க வேண்டும். ய்ப்பா ...... ஏர்போர்ட்டுக்கு போயி களைத்துவிட்டோம்.
இணையத்தில் செக்-இன் செய்திருந்ததால் நேராக லக்கஜை பொட்டுவிட்டு என் பேவரிட் Tim Hortons காபியை அருந்தியவாறே செக்யூரிட்டிக்கு போனால் அங்கே இருந்த ஆபிஸர்ர் "சார் காபியை குடித்து விட்டோ அல்லது கொட்டிவிட்டோ போங்கள்" அடபாவிங்களா மெதுவா காபிகூட குடிக்க முடியவில்லையே ... நல்லாயிருப்பீங்களா நீங்க"
விமானத்தில் ஏறி அமர்ந்ததும். பசி வயிற்றை கிள்ளியது. சாப்பட்டுக் ஏங்கினால் அதுவும் இலவசம் கிடையாதாம். (இலவசமாக கொத்தனார்கள் மட்டும் தான் கிடைப்பார்கள்) பைசா கொடுத்து வாங்க வேண்டுமாம். நல்லவேளை பர்கர் கிங், சப் வே போன்ற சாண்ட்விச்கள் கடையில் விற்கும் விலைக்கே கிடைத்தது.
விமானம் இறங்கி லக்கேஜ்களை கவர்ந்து வாடகை கார் எடுத்துக் கொண்டு இந்த பிரமாண்ட நகரில் எவ்வாறு கார் ஓட்ட போகிறோம் என்ற நினைப்பில் map களை என் மனைவியிடும் தந்து வழிசொல் என்றேன். அவரும் குஷியாக வழி சொல்ல ஆரம்பித்தார்.
வலப்பக்கம் திரும்பவும் , திரும்பினால் அது கிழக்கு நோக்கி போகும் விரைவு வழி சாலை. வெய்ட் நாம் மேற்கு நோக்கி அல்லவா போகவேண்டும் ... ம்ம்ம்ம்ம் சுற்றுலாவிற்கு வந்து வழி தவறவிடுவதும் ஒரு சுகமே. ஒரு வழியாக சுற்றி மேற்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்து முதல் ஸ்டாப்...
மதிய சாப்பாட்டிற்கு சரவணபவன்
நல்ல சாப்பாடு நம்மூர் சுவையை கனடாவிற்கு கொணர்ந்துள்ளார்கள்.
மற்ற இந்திய/பாகிஸ்தானிய உணவுவிடுதிகளை போலில்லாமல் சுத்தமாக இருக்கிறது அவர்களின் பவன்.

பேஷ்...பேஷ்...ரொம்ப நல்லாயிருக்கு என் சொல்லும் வகையில் அவர்களின் காபி இல்லை.. ஆனால பரிணாம வளர்ச்சியுற்று காபியை அந்த டேஸ்ட்டுக்கு கொண்டு வந்து வந்துவிடுவார்கள்.
சரவண பவனின் வடை குளோசப்பில்

மிக நல்ல உணவு உண்டு விட்டு என் மகன் வழிக்காட்ட மேற்கு நோக்கி மேலும் பயணம்.
என் இடபுறத்தில் கடல் அளவிற்கு விரிந்த ப்ரமாண்டமான் ஏரி. அத்தனையும் நல்ல நீர். உலகில் உள்ள ந்ல்ல நீரில் 25% இங்குதான் உள்ளது என என் புள்ளிவிவர புலியாகிய் என் மகன் சொன்னான்.
வழியெங்கும் திராட்சை தோட்டங்களும் அதனால் "சரக்கு" ஆலைகளும் உள்ளன.
வெகு சீக்கிரமே நயாகரா நகரம் வந்துவிட்டது.
அங்கே உள்ள ஓட்டலில் ரூம் எடுத்துவிட்டு ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் அருவி தெரியும் என் ஆசையோடு பார்த்தால் கட்டிடங்கள் தான் தெரிந்தன. ஒட்டல் இருந்தது Falls View Boulevard ஆனால் அருவி இருப்பதோ River Road இல்.
ஒரு 5 நிமிட நடையில் அருவிகரைக்கு வந்துவிட்டோம்.
அருவிகள் விழுவதும் அதிலிருந்து எழும் நீர் துவாலைகள் நம்மை தழுவதும் மிக பரவசமான அனுபவ்ம் . அருவிகரையில் அலைகடலன மக்கள் கூட்டம். அந்த கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் நம் துணைக் கண்டத்தை சார்ந்தவர்கள். அதிலும் நம் மக்கள் கூட்டம் அதிகம். அருவியுன் அக்கரையில் அமெரிக்கா
அங்கிருந்து படகில் மக்களை அழைத்து அருவிக்கு மிக அருகில செல்கின்றனர். அந்த பயணத்திற்கு பெயர் Maid of the Mist என்பது. பட்கில் ஒரு மெல்லிய மழை கோட்டுக் கொடுத்து மெதுவாக கதைகளை சொல்லி கொண்டு அழைத்துச் செல்கின்றனர். கடைசியாக படகு அருவியின் நீர் அருகே சென்று ஆனந்த மழையில் நனைய விடுகிறார்கள். கீழே உள்ள படத்தில் வட்டமிட்ட பகுதியில் படகை காண்க

அந்த படகில் நான் பாடிய பாடல்
" ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே..
நயகாரா அழகை நாம் காண்பதற்கு வண்ணகிளியே"
அந்த படகின் பயணம் முடிந்தவுடன் குதிரை லாட அருவியின் பின்புறம் போய் பாருங்கள் என அழைப்பு வந்தது. சரி போய்விடலாம் என நடந்து..நடந்து... அந்த குகையின் வாசலை அடைந்தோம். குதிரை லாட அருவியின் பின் புறம் பாரைகளை குடைந்து அருவியை அதன் முதுகிலிருந்து காண வைக்கிறார்கள். அருவிக்கு மிக அருகில் அழைத்து சென்று அந்த நீரின் ஆவேச பாய்ச்சலை உணரவைக்கிறார்கள். அந்த நீரின் வேகத்தை காட்டும் படமும் வீடியோவும் கீழே

மறுநாள் நாங்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த ஜெட் போட் பயணம்.
நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்காவின் ஈரி என்ற ஏரி யிலிருந்து நீர் வீழ்ந்து சிறு நதி யாக ஓடி கனடாவின் ஒண்டாரியோ ஏரியில் கலக்கிறது. இந்த சிறு நதியின் ஓட்டம் மிக ஆக்ரோஷமானது, இதில் சுழிகள் நிறைய இருக்கும். இந்த நதி ஒரு இடத்தில் 90 டிகிரி வலமாக திரும்புகிறது. இந்த இடத்தில் சுழிகள் அதிகம். இந்த சுழிகளை ஆங்கிலத்தில் Rapids என அழைக்கிறார்கள். இதனி லெவல் 1 முதல் 6 வரை வகைப்படுத்திய்ள்ளார்கள் . 1 நெம்பர் சுழி இலகுவானது. 6 நெமபர் மரணசுழி. இதில் உள்ளே போனவர்கள் மீண்டதாக சரித்திரம் இல்லை. 6 நெம்பருக்கு அருகில் அழைத்து சென்றார்கள் ஆனால் 5 நெம்பர் சுழிக்கு உள்ளே சென்று மீண்டதுதான் த்ரில். படகின் பயணத்தில் நம் உயிர்க்கு மட்டும் தான் உத்திரவாதம் உடமைகளுக்கு அல்ல என்று சொல்லிவிட்டார்கள். படம் எடுக்க முடியவே முடியாது, இங்குள்ள படங்கள் அவர்களின் இணையதளத்திலிருந்து சுட்டது
முதல் மூன்று வரிசையில் அமர்வகளுக்கு அதிக பட்ச த்ரில் என்றார்கள். நாங்கள் அமர்ந்தது மூன்றாவது வரிசை.
5 ஆம் எண் சுழிக்குள் நுழையும் போது என்னை அடித்த அலையை மறக்க முடியாது. அலை அடித்து ஒய்ந்தவுடன் நான் முதலில் பார்த்தது என் மனைவியும் மகனும் பத்திரமாக இருக்கிறார்களா என்று. இவ்வளவு பெரிய நல்ல நீர் அலையை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.
என்னை பொருத்தவரைஇந்த ஜெட் போட் பயணம்தான் நயாகராவின் மிக அதிக பட்ச அட்ராக்ஷன் . ஆகையால நண்பர்களே அடுத்தமுறை நயாகராவிற்கு போகும் போது இதனை தவறவிடாதீர்கள்.
இந்த ப்டகுகள் முன்புறம் தண்ணீரை உள்வாங்கி பின்புறம் பீச்சியடித்து முன்னேறும். மணிக்கு சுமார் 100கி.மீ வேகத்தில் செல்லும்

இவ்வாறு அமைதியாக ஆரம்பித்து.........

சுழியில் மூழ்கி.....

ஆ..உயிருடன் வெளியில்.....
இது இணையத்தில் சுட்ட வீடியோ. இந்த அளவிற்கு படம் எடுக்கும் காமிரா என்னிடமில்லை. இருந்திருந்தாலும் அந்த படகில் எடுத்து செல்லும் தைரியம் இருந்திருக்காது

படு ஆக்ரோசமாக பாயும் அலைகள்
இந்த பயணத்திற்கு அப்புறம் நயாகரா போதும் போதுமென்றாகி விட்டது. மற்றபடி எல்லா சுற்றுலாதளங்களின் இருக்கும் பூக்கடிகாரம். பறவைகள் சரணாலயம் (சிங்கபூரின் பறவைகள் பார்க்குடன் ஒப்பிடுகையில் இது ஒரு ஜூஜூபி) வழக்கமான சமாச்சாரங்கள்.


இதோ பேரிக்காய்......

இரவில் நயாகராவில் விளக்கேத்துகிறார்கள். படு செயற்கை வாணவேடிக்கையும் அமெச்சுரிஷ்


அதோ அமெரிக்கா.....
மறுநாள் அதிகாலையில் கனடாவின் பெரிய நகரமான டொரண்டாவிற்கு பயணம்.
டோரண்டோவில் என்னை அதிகம் கவர்ந்தது அங்கிருந்த தமிழ்.
நன்றி இலங்கை தமிழ் சகோதரர்களே.
ஆனாலும் சில தமிழ் கொஞ்சம் ஓவர் தான்.
உதாரணமாக ஒரு கடையின் பெயர் தளபாட அங்காடி. நல்லவேளை அங்கே பர்னிச்சர் பட்ம போட்டிருந்தார்கள் இல்லையென்றால் குமரனுக்கு போன் செய்து கேட்டிருக்க வேண்டும் அவரும் "தள" என்றால் பர்னி "பாட" என்றால் சர் இரண்டையும் சேர்த்தால் பர்னிச்சர் என் ஒரு பொழிப்புரை வழங்கியிருப்பார். :)
மேலும் சில தமிழர்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். நம் தமிழர்களை போலதான் இலங்கை தமிழர்களும் என்று நினைத்தேன். அங்கிருந்த என் நண்பர் இலங்கை தமிழர்களுக்கு சென்னை தமிழ் பேச வராது அதனால் தான் ஆங்கிலம் என சொன்னார். மற்றபடி அவர்களுக்கு தமிழ்தான் உயிர் மூச்சு என்றார்.
டோராண்டோ இன்னுமொரு வட அமெரிக்க நகரம். ஒரு ஏரிக்கரை அல்லது ஆற்றங்கரை அல்லது கடற்கரை இதனருகே உயர்ந்த கட்டிடங்கள், ஒரு மிக உயர்ந்த டவர், மிக நெரிசலான தெருக்கள், பஸ்கள், பாதாள ரயில்கள், உலகத்தின் எல்லா இன மக்களும் அமைதியாக வாழும் வாழ்க்கை , வித வித் மான் உணவு கேளிக்கை விடுதிகள். நகரின் மத்தியில் ஒரு அமைதியான பூங்கா அகியவை தப்பாமல் இருந்தன. மற்றபடி டோராண்டோ ஒரு பிரமிப்பை என்னிடம் உருவாக்க வில்லை.

சி என் டவர்

அந்த டவரின் கண்ணாடி தளத்திலிருந்து.....
நம்மூரின் அஞ்சப்பர், வாங்க்ஸ் கிட்சன், சரவண பவன் போன்ற உணவ்கங்கள் உற்சாகமூட்டின. அஞ்சப்பரின் மதிய பபே மிக மலிவு 30 அய்ட்டங்கள் என்றார்கள் அதில் 27 மரக்கறி. அதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம்.

சென்னயின் வாங்க்ஸ் கிச்சன் தரத்திலும், சுவையிலும், சேவையிலும் முதல் தரம் என நீரூப்பித்துள்ளார்கள்.
ஜெரார்ட் தெருவில் சீனர், அரேபியர், உப்கண்டத்தினர் வரிசையாக கடைகள் வைத்து அந்த தெருவில் தத்தமது நாட்டின் அசுத்தத்தை வெளிபடுத்தி வாழ்கின்றனர்.

எந்த ஒரு இடத்திற்கு போனாலும் எல்லாரையும் நிற்க வைத்து ஒரு முழுநீள Hi-Definition போட்டோ எடுக்கிறார்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வாங்கலாம். ஆனால் போட்டோ கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் . மறுக்க முடியாது. தீவிரவவத கண்காணிப்பு தான் காரணம்
இந்த சுற்றுலாவில் என்னை மிகவும் வேதனை அடைய செய்தது என் கிரடிட் கார்ட்டின் நிலைதான். பாவம் அதனை தேய்த்து தேய்த்து அதன் முதுகு தோலை உரித்துவிட்டார்கள். தெருவில் நடக்க மட்டும்தான் இலவசம் மற்ற எல்லாவற்றிற்க்கும் காசு காசு தான்.
கால்கரியில் கிடைப்பதற்கரிய சுவாமி விக்ரகங்கள், மாவாட்டும் இயந்திரம் ஆகியவைகளை வாங்கி மீண்டும் 4 மணிநேரம் பறந்து, 5 நாட்களுக்கு முன் பார்க் செய்த காரை கண்டுபிடித்து, ஏர் போர்ட்டை விட்டு வெளியே வந்து காலியான கால்கரி சாலையில் கார் 100 ஐ தொடும் போது பாடியே பாடல் "சொர்க்கமே என்றாலும் கால்கரி போல வருமா......